அரசியலும் இஸ்லாமிய எதிர்ப்பும் (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

அரசியலும் இஸ்லாமிய எதிர்ப்பும் (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

‘அஹ்ல் அஸ் சுன்னத் வல் ஜமாஅத்’தும் நான்கு கலீஃபாக்களும்

அடுத்து மற்றொரு தளத்திலிருந்து இதைப் பார்ப்போம். அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் அவர்கள், ‘இறைத்தூதருக்குப் பிறகு வந்த நான்கு கலீஃபாகளின் சட்டப்பூர்வத் தன்மையை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் ‘அஹ்ல் அஸ் சுன்னத் வல் ஜமாஅத்’தைச் சார்ந்தவர்கள்’ என்று கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம் பொதுமக்களிடையே அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ (ரழி அல்லாஹு அன்ஹும்) ஆகியோரின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்ட சில உறுதியான தோழமைக் குழுக்கள் அல்லது சமூகப் போக்குகள் இருந்தன. அவற்றை இந்த அரசாங்கங்கள் அஹ்ல் அஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்பதில் சேர்த்துக் கொள்ளவில்லை.

ஸைதி ஷியாக்கள் நான்கு கலீஃபாக்களின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை ஏன் இந்த அரசாங்கங்கள் அஹ்ல் அஸ் சுன்னத் வல் ஜமாஅத்தில் சேர்க்கவில்லை? பிற்காலத்தில் கவாரிஜ்கள் என்று அறியப்பட்டவர்களுள் ஒரு பகுதியினரும் நான்கு கலீஃபாக்களின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களும் இதில் சேர்க்கப்படவில்லை. பகுத்தறிவுச் சிந்தனைப் பள்ளியை உருவாக்கிய அல் முஃதசிலாக்களும் நான்கு கலீஃபாக்களின் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்றுக்கொண்டனர். ஆனால் தம் கால அரசாங்கங்களை ஆதரித்தவர்களின் பட்டியலில் இவர்கள் இல்லை. நம்மிடையே உருவாகிக் கொண்டிருக்கும் பிரிவினைக்கு வலுசேர்க்கும் இத்தகைய அடிப்படைப் பிரச்சனைகளைக் களையெடுப்பதிலிருந்து முஸ்லிம்களின் கவனம் சிதறியே இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

கைலான் அல் திமஷ்கியின் அரசியல் எதிர்ப்பியக்கம்

எளிதாக விளங்கிக் கொள்ள உதவும் என்பதால் ஒரு நிஜ மனிதரின் உதாரணத்தை பார்ப்போம். நம்மில் பெரும்பாலோர் கேள்விப்படாத அல்லது கேள்விப்பட்டிருந்தாலும் அதிக விவரம் அறியப்படாத ஒருவரின் வரலாறைப் பார்ப்போம். அவருடைய பெயர் கைலான் அல் திமஷ்கி. அவர் தமஸ்கஸில் வாழ்ந்து கொண்டிருந்தார். அசலில் அவர் எகிப்தில் இருந்து வந்தவர் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு கோப்டு (பண்டைய எகிப்திய) கிறிஸ்துவராகக் கூட இருந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும் இப்போது அவர் ஒரு உறுதிமிக்க முஸ்லிமாக உமவி மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்த மன்னராட்சி முஸ்லிம் பொதுமக்களிடையே ‘அல் ஜபரிய்யா’ என்றொரு போக்கை ஆதரித்து பரப்பிய போது அவர் அதை எதிர்த்தார். ‘ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது என்ற காரணத்தால்தான் மக்கள் ஒவ்வொரு செயலையும் செய்கின்றனர்’ என்ற கோட்பாடு அன்று பெரும் விவாதமாக விளங்கியது. அதாவது ஒருவர் ஆட்சிக்கு வருகிறார் என்றால் அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என அல்லாஹ் விதித்துள்ளான். முஆவியா பதவிக்கு வந்தால், அதற்கு காரணம் அல்லாஹ் அவ்வாறே விதித்துள்ளான். அதை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இத்தகைய கோட்பாடு, இஸ்லாமிய நம்பிக்கையின்  (ஈமான்) செயல்துடிப்பு மிக்க பகுதியை நீக்கிவிட்டது. இப்போது இந்த ‘ஜப்ர்’ சிந்தனையின் காரணமாக ஒடுக்குபவருக்கும் (அல் ளாலிம்) ஒடுக்கப்பட்டவருக்கும் (அல் மள்லூம்) இடையே சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சமூக நீதிப் பிரச்சனைகளை யாரும் வெளிப்படையாக பேசவில்லை.

ஆனால் கைலான் அல் திமஷ்கி இந்த விவகாரத்தை வெளிப்படையாகப் பேசினார். ஹசன் இப்னு முஹம்மது இப்னு அல் ஹனஃபியா இப்னு அலீ இப்னு அபீ தாலிபின் செல்வாக்குக்கு அவர் ஆட்பட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இன்று இருப்பது போல அன்றும் அரசியல் நெறிபிறழ்வுக்கு எதிரான ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு இருந்தது. அன்றும் இன்றும் இஸ்லாமிய எதிர்ப்பு இருந்தது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அன்றும் இத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டதாக (ஹராம்) இருந்தது. அது இன்றும் தொடர்கிறது. இன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது.

கைலான் அல் திமஷ்கி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பானவர்கள்’ என்று அவர் நம்பினார். அரசாங்கம் ஆதரவளித்த முன்விதிக் கோட்பாட்டின் காரணமாக யாரும் எதையும் செய்வதில்லை என்றார். அப்படி இருந்தால் எந்த ஒரு செயலுக்கும் யாரையும் பொறுப்பாக்க முடியாது. இது அல்லாஹ்வின் பண்புகளாகிய அல் அத்ல், அர் ரஹீம், அல் கஹ்ஹார் போன்றவற்றுக்கு முரணாக இருக்கிறது. சுய விருப்பத் தேர்வின்றி அல்லாஹ் விதித்துள்ளான் என்பதாலேயே ஒவ்வொரு செயலையும் நாம் செய்கிறோம் என்று ஒவ்வொருவரும் நம்பினால் என்ன நடக்கும்? அல்லாஹ்வின் வசனம் தெளிவாக இருக்கிறது:

فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ

…யார் விரும்புகிறாரோ அவர் நம்பிக்கை கொள்ளட்டும். யார் விரும்புகிறாரோ அவர் நிராகரிக்கட்டும்… (அல் குர்ஆன் – 18:29)

குர்ஆனில் காணப்படும் அல்லாஹ்வின் இச்சொற்களில் தேர்வு செய்யும் சுதந்திரம், விரும்பும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ

எனினும் அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் நாட மாட்டீர்கள்… (அல் குர்ஆன் – 76:30)

‘அல்லாஹ் நாடுவதை மட்டுமே நீங்களும் நாடுவீர்கள், செய்வீர்கள்’ என்று ‘ஜப்ரிய்யா’ சிந்தனை கொண்டவர்களைப் போல இந்த வசனம் விளங்கிக் கொள்ளப்படுவதில்லை. மாறாக மனிதன் நம்பிக்கை-நிராகரிப்பு இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அவனுடைய விருப்பத்தின் இறுதி விளைவு —எப்படிப் பார்த்தாலும்— அல்லாஹ்வின் நாட்டத்தோடு பொருந்திப் போகும் என்றுதான் இவ்வசனம் பொருள்படுகிறது. அவன் நல்லதைச் செய்தால் அவனுக்கு வெகுமதி வழங்குவதும் தீயதைச் செய்தால் அவனை தண்டிப்பதும்தான் அல்லாஹ்வின் நாட்டம் ஆகும். ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறொரு கோட்பாடு அன்று நிலவிய போது அதற்கு எதிரான அரசியல் எதிர்ப்பும் இருந்தது. இந்த எதிர்ப்பு பற்றிய செய்தி நமக்குத் தெரிந்துவிடக்கூடாது என்றும் அத்தகைய எதிர்ப்பின் நீட்சி இன்று தொடர்ந்துவிடக்கூடாது என்றும் சிலர் செயல்படுகின்றனர்.

எல்லா முஸ்லிம் ஆட்சியாளர்களும் தெளிவாகவே வழிதவறும் போதிலும் யாரும் எதிர்ப்பை வெளிக்காட்டக் கூடாது என்கின்றனர். அவர்கள் இஸ்லாத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்தில் குர்ஆனில் இடம்பெறும் சொற்களை வீரியமிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். அல்-முஷ்ரிக், அல்-காஃபிர் என்ற சொற்களெல்லாம் முனைமழுங்கடிக்கப்பட்டுவிட்டன. இச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் எதுவும் இப்போது இல்லை. அப்படியே இருந்தாலும் அவை தற்கால நிஜ உலகத்தைப் பிரதிபலிக்காமல் வரலாற்று ரீதியான அர்த்தங்களை மட்டுமே சுமந்து நிற்கின்றன.

இது அனைத்திலிருந்தும் கைலான் அல் திமஷ்கி மாறுபட்டார். ‘நம்பிக்கையின் (ஈமான்) மதிப்பு நம் செயலிலும் தீர்மானங்களிலும்தான் இருக்கிறது’ என்றும் ‘அல்லாஹ்வையோ இஸ்லாத்தையோ தெரிந்து வைத்திருப்பதில் மட்டும் இல்லை’ என்று அவர் கருதினார். இது அவரை அன்றைய அரசாங்கத்துக்கு நேர் எதிராக நிறுத்தியது. மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர் பிரச்சாரம் செய்யத் துவங்கினார். இரண்டாயிரம் பக்கங்கள் அளவுக்கு நூற்களை எழுதினார். எனினும் அதில் ஒன்று கூட மிஞ்சவில்லை. அரசாங்கங்களோடு முரண்படும் மக்களின் நிலைமை என்னவாகும் என்பதற்கு இது சான்றாகும்.

தமஸ்கசில் மக்கள் இயக்கத்தைத் துவக்கிய அவர் மேலும் பிரபலம் அடைவதைக் கண்ட அரசாங்கம், அவரை சரிகட்ட முடிவெடுத்தது. அவர் தப்பியோடி தலைமறைவானார். ஆனால் அவர்கள் அவரை விடாது துரத்தினர். அதிகாரிகள் அவரைக் கைது செய்வதற்கு முன்னர் —ஐந்தாம் கலீஃபா என்று கருதப்படும்— உமர் இப்னு அப்துல் அஸீஸோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினர். அவர்கள் பல விஷயங்களில் ஒன்றுபட்டனர்; சிலதில் வேறுபட்டனர்.

ஹிஜ்ரி  99 முதல் 102 வரையான மூன்றாண்டு காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். உமர் இப்னு அப்துல் அஸீஸ் காலத்தில் அரசியல் சூழல் மாறியது. எதிர்கட்சியினர் தமக்குத் தோன்றியதை வெளிப்படையாகப் பேசலாம் என்ற நிலைமை உருவானது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்றாக உமர் இப்னு அப்துல் அஸீஸ், கைலான் அல் திமஷ்கியை இஸ்லாமியக் கருவூலத்தில் இருந்த செல்வத்தை மறுவிநியோகம் செய்யும் பொறுப்பில் அமர்த்தினார். அதற்கு முன்னர் அச்செல்வம் உமவி ஆளும் வர்க்கத்துக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது அது மக்களுக்குச் சொந்தமாகியது. மக்கள் மத்தியில் சென்று கைலான் இவ்வாறு கூறினார்: “மக்களே! மோசடிக்காரர்களின் (ஆட்சியாளர்களின்) செல்வத்தை நோக்கி வாருங்கள்! அநியாயம் இழைத்தோரின் செல்வத்தை நோக்கி வாருங்கள்!” இது அனைத்தும் பொதுவெளியில் சொல்லப்பட்டது. ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சொந்தமாக இருந்த வசதி வாய்ப்புகளை, தனியுரிமைகளை அவர்களிடமிருந்து எடுத்து தேவையுடைய மக்கள் மத்தியில் மறுவிநியோகம் செய்தார்.

கைலான் ஒருமுறை தமஸ்கசின் பொதுச் சதுக்கத்தில் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஹிஷாம் இப்னு அப்துல் மலிக், பின்வருமாறு கூறினார்: “இந்த நபர் என்னை தூற்றுகிறார். என் குடும்பத்தையும் என் முன்னோர்களையும் தூற்றுகிறார். என் கையில் அதிகாரம் வந்தால் இவருடைய கை கால்களை வெட்டிவிடுவேன்”. அப்போது ஹிஷாம் மன்னராக பொறுப்பேற்றிருக்கவில்லை. உமர் இப்னு அப்துல் அஸீஸின் ஆட்சி மூன்று ஆண்டுகள் நீடித்தது. அவருடைய குடும்பத்தினரே அவரை எதிர்த்தனர். அவருடைய செயல்களின் விளைவுகள் குறித்து அவரை எச்சரித்தனர்.

நேர்மையான ஒரு ஆட்சியாளர் நிலைமையை சரிசெய்ய முயற்சிக்கும் போது தன்னுடைய நெருங்கிய வட்டத்திலிருந்தே மிரட்டல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது “தீர்ப்பு நாளின் கேள்விக் கணக்குக்கு அஞ்சத் தேவையற்ற எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நான் அஞ்சப் போவதில்லை”, என்று உமர் இப்னு அப்துல் அஸீஸ் பதிலளித்தார். பின்னர் ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் மன்னரானதும் கைலான் அல் திமஷ்கியை வேட்டையாடத் துவங்கினார். கைலானும் அவருடன் இருந்த மற்றொருவரும் மீண்டும்  தலைமறைவாயினர்.

இறுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவ்ஸாயி என்றொரு சட்டவியலாளரை (ஃபகீஹ்) அழைத்து அவரிடம் இவர் குறித்து தீர்ப்பு கேட்டனர். அவ்ஸாயி —இன்றைய சட்டவியலாளர்களைப் போல— குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் குரலில் பேசாமல் அரசாங்கத்தின் குரலில் பேசுபவராக இருந்தார். கைலான் அல் திமஷ்கிக்கு மரணதண்டனை விதிக்கலாம் என்று அவர் தீர்ப்பளித்தார் (ஃபத்வா). இன்றும் கூட இத்தகைய மார்க்கத் தீர்ப்புகளைப் பார்க்க முடிகிறது. அவை அன்றிலிருந்தே துவங்கிவிட்டன. பின்னர் ஹிஷாம் இப்னு மலிக், கைலான் அல் திமஷ்கியையும் அவருடன் இருந்த சாலிஹ் என்பவரையும் பாப் கைசான் எனும் தமஸ்கசின் வாயில் ஒன்றில் சிலுவையில் அறைந்தார். சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களை நோக்கி கைலான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இஸ்லாமிய எதிர்ப்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அரசியல் அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக, சமூக நீதி வேண்டி நிகழ்த்தப்பட்ட மேலும் பல இஸ்லாமிய எதிர்ப்பின் வரலாறுகளை நாம் பார்க்க இருக்கிறோம். இவையெல்லாம் அல்லாஹ்வுக்கு உறுதியாகக் கட்டுப்படுவதில் உள்ளடங்குவதாகும். வெறும் அறிவு மட்டும் நம்பிக்கை (ஈமான்) ஆகாது என்று கைலான் அல் திமஷ்கி கூறினார். அறிவோடு சேர்த்து அல் மஹப்பாஹ், அல் குதுவா மற்றும் அல் இக்ரார் ஆகியவற்றையும் உள்ளடக்கியதுதான் நம்பிக்கை ஆகும். இத்தகைய நம்பிக்கை எப்படி நம்மை வந்தடையப் போகிறது என்றும் அது எப்படி ஒரு சமூகச் செயல்பாடாக மாறப் போகிறது என்பதையும் நாம் பார்க்க விரும்புகிறோம். நம்பிக்கை (ஈமான்) என்பது கொடூரமான ஆட்சியாளர்களுக்கும் நாட்டை ஆளும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களுக்கும் அடிவருடி நிற்பதல்ல.

ஹஜ்ஜுக்குரிய காலம்

சகோதர சகோதரிகளே, உறுதிமிக்க முஸ்லிம்களே!

நமக்கு அந்நியமான தகவல்களை களையெடுக்கவும் நம் மனதிலுள்ள மாசுக் கருத்துகளை அகற்றவும் நாம் மேற்கொண்டுள்ள தொடர் முயற்சியில் இறைத்தூதரின் செயல்களையும் சொற்களையும் உரைகல்லாகக் கொண்டுள்ளோம். அல்லாஹ்வின் சொற்கள், அவனுடைய அத்தாட்சிகள் மற்றும் அவன் நமக்கு வழங்கியுள்ள செய்திகள் ஆகியவற்றின் சூழமைவில் இதைச் செய்கிறோம். வெறும் வரலாற்றுப் பாடம் என்ற கோணத்தில் நாம் இதைச் செய்யவில்லை. இன்று நாம் எப்படி நடத்தப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கத்திலேயே நாம் இதைப் பேசுகிறோம்.

மக்கா, மதீனா மற்றும் அல் குத்ஸ் ஆகிய மூன்று புனிதத் தலங்களை (ஹரம்) ஆட்சி புரிபவர்களை எடுத்துக் கொண்டால், நம் வரலாற்றின் ஏற்ற இறக்கங்களை, அதில் நிகழ்ந்த சோதனைகளை, தவறுகளை ஆழமாகப் புரிந்து வைத்திருந்தால், தற்போது நிலவும் நிலைமையைத் தொடர நாம் அனுமதித்திருக்க மாட்டோம். இஸ்லாத்துக்கு எதிரான அமைப்புகள் வலுப்பெறுவதையும், மத அங்கிகளைப் போர்த்திக் கொண்டு இத்தகைய அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சட்டப்பூர்வத் தன்மையை கொடுப்பவர்களையும் நாம் அனுமதித்திருக்க மாட்டோம்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் மக்காவில் முன்னூற்றி நாற்பத்தைந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது அரிதாக நடக்கும் சம்பவம் அல்ல. இப்போதெல்லாம் இது வாடிக்கையாகிவிட்டது. மக்காவுக்குச் சென்றாலே ஏதோ ஒரு கொலைக் களத்துக்குச் செல்வது போலாகிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் இதற்காக யார் மீதும் நம்மால் பொறுப்பு சுமத்த முடியவில்லை.

ஜப்ரியாக்களின் கொள்கை இன்றும் நம்மிடையே உயிருடன், துடிப்புடன் இருப்பதைப் பார்த்தீர்களா? நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏன் இவ்வாறு நடக்கிறது? இதற்கெதிராக நாம் எதுவும் சொல்லிவிடுவோமோ என்று எண்ணி அதற்கு முன்னரே அவர்கள் “இதைத் தடுக்கும் பொருட்டு அடுத்த வருடம் மற்றொரு தளத்தை, ஒரு பாலத்தை, குறுக்குப் பாதையை அல்லது ஏதோ ஒன்றை கட்டுவார்கள்” என்று சொல்கின்றனர். இதை எத்தனை முறை கேட்டுவிட்டோம்?! “இதற்காக 120 கோடி டாலர்கள் செலவு செய்ய உள்ளோம்” என்றும் கூறுகின்றனர்.

பணம் செலவு செய்வது தேவைதான் என்றாலும் அது மட்டும் தீர்வாகிவிடாது. அவர்களிடம்தான் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறதே! அதைத்தானே அவர்கள் போர்க்களத்தில் நமக்கெதிராக இருப்பவர்களுக்குக் கொடுக்கின்றனர்! ஆனால் நாம் “இதெல்லாம் அல்லாஹ்வின் நாட்டம். நம் செயல்களுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம்!” என்று நம்ப வேண்டும் போலும்! பிரச்சனைக்கான தீர்வு இதுவல்ல.

பிரச்சனை என்னவென்றால் பல லட்சம் முஸ்லிம்கள் குறுகிய காலத்தில் பல சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். அக்குறுகிய கால அளவு நீட்டிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் ஷைதானைக் (இப்லீஸ்) குறிக்கும் —’ரமி அல் ஜமராத்’ என்ற— தூண்கள் அங்கு இருந்தன. ஷைதான் மீது கல்லெறியும் போது அத் தூண்கள் அல்லது கம்பங்களின் மீதுதான் கற்களை வீசிக் கொண்டிருந்தோம். பின்னர் இந்தச் சட்டவியலாளர்கள் யாரோடும் கலந்தாலோசிக்காமல், “ஹாஜிகளின் வசதிக்காக இக் கம்பங்களை அகலப்படுத்தி ஒரு சுவராக மாற்றிவிடலாம்” என்றனர்.

‘இது ஒரு நூதனம் (பித்ஆ). நீங்கள் என்ன செய்கிறீர்கள்?! இப்படிச் செய்வதற்கு முன் ஏதாவது கலந்தாலோசனை நடைபெற்றதா? கருத்தொற்றுமை ஏற்பட்டதா?’ என்று அவர்களிடம் கேட்கும் தைரியம் யாருக்காவது இருக்கிறதா?! இப்படிச் செய்வதற்கு முன் ஏதாவது கலந்தாலோசனையோ கருத்தொற்றுமையோ ஏற்பட்டதா? சர்வாதிகார ஆட்சிகள் நடந்து கொள்வதைப் போலவே அவர்கள் விரும்பியதை அவர்களாகச் செய்து கொண்டனர். இப்பிரச்சனைக்கான தீர்வு அக் கம்பங்களை சுவராக அகலப்படுத்துவதில் இல்லை. மாறாக சில வார அளவு கொண்ட காலத்தை மாதங்களாக நீட்டுவதில்தான் இதற்கான தீர்வு உள்ளது.

الْحَجُّ أَشْهُرٌ مَّعْلُومَاتٌ

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்… (அல் குர்ஆன் – 2:197)

குர்ஆனின் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் பெரிய விஞ்ஞானியாகவோ அரபு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு மூன்று வாரங்கள் என்பதற்குப் பதிலாக மூன்று மாதங்கள் என்று அவகாசம் அளித்தால் நாம் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துக் கொண்டோ இடித்துத் தள்ளிக் கொண்டோ இருக்கமாட்டோம். இப்போது இது ‘ஹஜ் தள்ளு-முள்ளு’ என்றாகிவிட்டது. உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இச்சம்பவங்களை அணுகினால் இப்படித்தான் அதற்குப் பெயர் வைக்கத் தோன்றும்.

நம்மிடமிருந்து எந்த ஆலோசனைகளையும் எதிர்பார்க்காத ஆட்சியாளர்கள் இன்று உள்ளனர். பதிமூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்விவகாரங்களிலிருந்து நாம் வெளியே தள்ளப்பட்டுவிட்டோம். இந்தக் குழப்பங்களிலிருந்து வெளியே வருவதற்காக சிந்திக்கக் கூட முடியாத முஸ்லிம்களுக்கு துன்பம்தான் எஞ்சி நிற்கிறது. “அவர்களை வெளியே தெருக்களில் வீசுங்கள்! அவர்களை ஹஜ்ஜுக்கு அனுமதிக்காதீர்கள்! அவர்களுக்கு எதிராக எல்லா குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசுங்கள்! அவர்களை இழிவுபடுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் அணுகுமுறையாக இருக்கிறது. ஆனால் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் விட அவன் மேலானவன்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *