திருமணத்தின்போது ஆயிஷாவின் (ரழி) வயது ஒன்பது அல்ல – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

சமகால இஸ்லாமிய சிந்தனை நிறுவன (Institute of Contemporary Islamic Thought – ICIT) ஆராய்ச்சியாளரான இமாம் முஹம்மது அல் ஆஸி அல் குர்ஆனின் முதல் ஆங்கில விளக்கவுரை (தஃப்சீர்) The Ascendant Qur’an: Realigning Man to the Divine Power Culture – Volume 14 பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த விளக்கவுரையின் பதிமூன்று தொகுதிகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

♣ ♣ ♣ ♣ ♣

உரையாற்றிய நாள்: 09-10-2015

YouTube link: Aa’ishah Wasn’t Married at Nine Years of Age

இமாம் அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம்.

தமிழாக்கத்தை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

♣ ♣ ♣ ♣ ♣

உறுதிகொண்ட சகோதரர்களே! முஸ்லிம்களே! நம் கவனத்தைக் கோரும் முக்கியமான விஷயங்கள் பல இருக்கும் போது வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும் நிர்பந்தம் ஏற்படுவது குறித்து நான் விரக்தியடைகிறேன். எனினும் அல்லாஹ்வின் துணைகொண்டு அவனை எதிர்பார்த்து இருப்பதால் அந்த விரக்திநிலை நம்மை நம்பிக்கையிழந்து ஊக்கமிழக்கச் செய்வதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது நாம் பிற பகுதிகளைச் சுத்தம் செய்யும் முன், நம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே நாம் கூறியது போல நம் வீட்டிலும் மாசு படிந்துள்ளது. இதை ஓரளவிற்காவது —குறைந்தபட்சம் மனதளவில்— சுத்தம் செய்யும் முயற்சியில் நாம் இறங்கியுள்ளோம்.

இறைத்தூதரோடு (ஸல்) பொருந்தாத, ஹதீஸ் இலக்கியத்திலும் சேராத மோசடியான, புனையப்பட்ட, போலியான ஹதீஸ்களைக் குறித்துதான் நாம் இங்கே பேசுகிறோம். இங்கு நான் ஒரு விஷயத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இறைத்தூதர் (ஸல்) தவறே இழைக்காதவர்; குறைகளற்றவர்; பாவங்கள் செய்யாதவர்; அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானவர். அவர் மீது புனையப்பட்ட கூற்றுகளைக் களைய நாம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது, அவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதையையோ, கண்ணியத்தையோ, அன்பையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல. இதனடிப்படையில், இறைத்தூதர் (ஸல்) குறித்து உள்ள சில கூற்றுகளையும் அவர் பற்றி உள்ள சில அபிப்பிராயங்களையும் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளோம்.

சிஹாஹ் (ஏற்புடைய ஹதீஸ் நூல்கள்) என்று அழைக்கப்படும் நூல்களில் உள்ள இத்தகைய சில ஹதீஸ்களை நாம் களையெடுக்க முற்படும்போது, ஹதீஸ் இலக்கியம் முழுவதையும் நிராகரிக்கிறோம் என்றும், தீய எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்றும், ஒரு மறைவான செயல்திட்டத்தை முன்னெடுத்து நெறிபிறழ்ந்து செல்கிறோம் என்றும் சில உணர்ச்சிவசவாதிகள் நம்மீது பழி சுமத்துவர். நாம் அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக சொல்வது இதுதான்: “நீங்கள் சொல்வது தவறு”. ஆகவே, பெரும்பாலான முஸ்லிம்களால் ஏற்புடையது என்று கருதப்படும் சில ஹதீஸ்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இறைத்தூதரின் கூற்றுகள் அடங்கிய அழகிய தோட்டத்தில் பொருந்தாத ஹதீஸ்களை களையெடுக்கவே முயற்சி செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது அல் புகாரியில் உள்ள ஒரு ஹதீஸை பார்ப்போம். ஒரு உணர்ச்சிமிகு விஷயத்தைப் பற்றிக் கூறும் இந்த ஹதீஸ், பொதுவெளியில் முறையாக அறிவுசார் நோக்கில் ஆராயப்பட்டதே இல்லை. இறைத்தூதருக்கும் (ஸல்) ஆயிஷாவுக்கும் (ரழி) நடந்த திருமணத்தைப் பற்றிய ஹதீஸ்தான் இது. அல் புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ள இந்த ஹதீஸின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு: ஆயிஷாவிடமிருந்து (ரழி) கேட்டு இதை அறிவிக்கும் நபர்கள் —வரிசையாக பின்வருமாறு: ஃபர்வாஹ் இப்னு அபில் மிக்ஹ்ராப், அலீ இப்னு முஸ்கிர், ஹிஷாம், ஹிஷாமின் தந்தை மற்றும் ஆயிஷா (ரழி). ஆயிஷா (ரழி) கூறினார்: “நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, இறைத்தூதர் (ஸல்) என்னை திருமணம் செய்தார். ஒன்பது வயதை அடைந்த போது நான் என்னை அவருக்குக் கொடுத்தேன்”.

கீழைத்தேயவாதிகள், வெளியிலிருந்து இஸ்லாத்தைத் தாக்க முற்படுபவர்கள், நமக்குள்ளேயே இருந்து இவர்களின் கூற்றுகளை எதிரொலிப்பவர்கள் ஆகியோருக்கு மத்தியில் இருக்கும் நாம், நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சனைகளை நன்றாகவே அறிவோம். “இது உங்கள் இஸ்லாமிய அடிப்படை நூல்களில் இருப்பதுதானே. வெளியிலிருந்து நாங்கள் எதையும் எடுத்து வரவில்லையே” என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே இந்தப் பிரச்சனையை யாரும் நிராகரித்துவிட முடியாது.

இந்த ஹதீஸ் திருக்குர்ஆனின் அர்த்தத்தோடு பொருந்தாத, இறைத்தூதரின் (ஸல்) பண்புநலன்களுக்கு ஏற்பற்ற ஒரு ஹதீஸ் என்று நாம் கூறுகிறோம்.

இப்போது, ஆதாரப்பூர்வ இஸ்லாமிய வரலாற்று நூல்களை எடுத்துக்கொள்வோம். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் அறிஞர்களும் மேற்கோள் காட்டும் இத்தகைய பல நூல்கள் உள்ளன. இறைத்தூதரின் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றியும் மக்கா மற்றும் மதீனாவில் 23 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட பணி குறித்தும் பேசும் இத்தகைய நூல்களுள் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்: அல் காமில், சியார் ஆலம் அந்நுபலா, தாரீக் அத் தபரி, தாரீக் திமஷ்க், அல் பிதாயா வல் நிஹாயா, தாரீக் பாக்தாத் மற்றும் வ சயதுல் அஹ்யாம். இறைத்தூதரின் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி பேசும் எல்லா முஸ்லிம் அறிஞர்களும், ஏதோ ஒரு விதத்தில் மேற்கோள் காட்டும் நூல்கள்தான் இவை.

இந்த நூல்கள் எல்லாமே, மக்காவில் இறைத்தூதரின் (ஸல்) பணி —பி’ஸா முதல் புலப்பெயர்வு (ஹிஜ்ரத்) வரை— ஏறத்தாழ 13 ஆண்டு காலம் நீடித்தது என்று கூறுகின்றன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அதன்பிறகு மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) வாழ்ந்த காலம் 10 ஆண்டுகள் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆகவே இறைத்தூதரின் (ஸல்) பணி மொத்தமாக 23 ஆண்டுகாலம் நீடித்தது. ஆங்கில நாட்காட்டிப்படி, கி.பி. 623இல் புலபெயர்வு (ஹிஜ்ரத்) நிகழ்ந்தது. இறைத்தூதரின் (ஸல்) மறைவு 633இல் நிகழ்ந்தது. இவையனைத்தும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளே. மாதங்களில் வேண்டுமானால் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வருடத்தைப் பொருத்தவரை, இவையனைத்தும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. இதை வாசகர்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டுகிறேன். ( பி’ஸா: மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மற்றொரு மனிதரை இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்புவது – மொழி பெயர்ப்பாளர்)

அல் புகாரி, முஸ்லிம் மற்றும் வேறு சில ஹதீஸ் நூல்களிலுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஹிஜ்ரத்துக்கு மூன்று ஆண்டுகள் முன்னர் ஆயிஷாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதாவது மக்காவில் இறைத்தூதர் தம் பணியைத் துவங்கி 10 ஆண்டுகள் கழித்து, இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆங்கில நாட்காட்டியின்படி இது 620-ல் நிகழ்ந்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே மேற்கோள் காட்டிய ஹதீஸின் அடிப்படையில், இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்க கேட்டுக்கொண்ட போது, ஆயிஷாவின் வயது ஆறு. அதாவது, தூதுத்துவப் பணியின் பத்தாவது ஆண்டில் ஆயிஷாவின் வயது ஆறு. பின்னர், இறைத்தூதர் அவரை முறையாகத் திருமணம் முடிக்கும் போது —அரபியில் இதற்கு ‘தகஹல பிஹா’ என்று சொல்லப்பட்டுள்ளது— அவரின் வயது ஒன்பது. இதனடிப்படையில் பார்த்தால், ஆயிஷா 614-ல் பிறந்திருக்க வேண்டும். அப்போதுதான் 620-ல் —இறைத்தூதர் அவரை திருமணம் முடிக்க விருப்பம் தெரிவிக்கும் போது— அவர் ஆறு வயதை அடைந்திருக்க முடியும். இவையனைத்துமே அல் புகாரி மற்றும் முஸ்லிமின் ஆதாரத்தில் சொல்லப்படுகிறது.

இப்போது இத்தகவல்களை விமர்சன நோக்கோடு பார்ப்போம். நாம் ஏற்கனவே கூறிய வரலாற்று நூல்கள் அனைத்தும் ஆயிஷாவின் சகோதரி அஸ்மா, அவரைவிட பத்து வயது மூத்தவர் என்று கூறுகின்றன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அஸ்மா ஹிஜ்ரத்துக்கு 27 ஆண்டுகள் முன்னர் பிறந்தார் என்பதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றொரு கருத்து. இறைத்தூதர் மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது அஸ்மாவின் வயது 27 எனில், அதற்கு 13 ஆண்டுகள் முன் —இறைச்செய்தி (வஹீ) துவங்கிய போது— அவரது வயது 14 ஆக இருக்கும். இவரைவிட ஆயிஷா பத்து வயது இளையவர் எனில், வஹீ துவங்கிய போது ஆயிஷாவின் வயது நான்கு. ஆனால் அல் புகாரியிலுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இறைச்செய்தி (வஹீ) துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் பிறந்திருக்க வேண்டும். ஆனால் எல்லா வரலாற்று நூல்களின் அடிப்படையிலும் பார்த்தால், அவர் அப்போது இதைவிட பல ஆண்டுகள் மூத்தவராக இருந்தார் என்று பார்க்கிறோம். இங்கு ஒரு முரண் ஏற்படுவதைப் பாருங்கள். ஆகவே இதில் எங்கோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நூல்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இறைதூதர் ‘இக்ரா’ மற்றும் ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ வசனங்களை துவக்க காலத்தில் பெற்றபோது, ஆயிஷாவின் வயது நான்கு. பத்து வருடங்கள் கழித்து —அதாவது புலபெயர்வுக்கு (ஹிஜ்ரத்) மூன்று வருடங்கள் முன்—- இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் முடிக்கக் கேட்ட போது, ஆயிஷாவின் வயது பதினான்கு. எனில், அப்போது அவருக்கு ஆறு வயது என்று ஏன் இந்த ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன? இதை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பின்னர் அல் மதீனாவில் முதல் வருடத்தில்தான் இறைத்தூதர் ஆயிஷாவை அசலில் திருமணம் முடித்தார். எனவே நான்கோடு பதிமூன்று வருடங்களைச் சேர்த்தால், அப்போது ஆயிஷாவின் வயது 17 என்றாகிறது. இன்னும் சொல்லப்போனால், அல் மதீனாவில், முதல் வருடத்தின் இறுதியில்தான் இத்திருமணம் நடைபெற்றது என்று நாம் அறிகிறோம். எனவே அப்போது ஆயிஷாவின் வயது 18 ஆகியிருக்கும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் நாம் நம் ஆய்வுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். நாம் அறிந்தவரையில், இவ்வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மையை எந்த அறிஞரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. அப்படி இருக்கையில், இந்நூல்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று நாம் ஏன் இதுவரை பார்க்கவே இல்லை? இந்த வரலாற்றாசிரியர்கள் அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஒரே தவறை செய்து, அல் புகாரியும் முஸ்லிமும் மட்டும் இதைச் சரியாகச் சொல்லிவிட்டார்களா என்ன? இக்கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும்.

அடுத்ததாக, இந்த விஷயம் குறித்து மற்றொரு தகவலைப் பார்ப்போம். அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் கொடுங்கோலன் ஹஜ்ஜாஜால் கொல்லப்பட்ட சில நாட்களில் அஸ்மாவும் மரணமடைந்தார். ஹி.73-ல் இச்சம்பவம் நடைபெற்ற போது அஸ்மாவின் வயது 100. நம்பகமான வரலாற்று நூல்கள் அனைத்தும் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. மேலும், ஹிஜ்ரத்துக்கு 27 வருடங்கள் முன்னர் அஸ்மா பிறந்தார் என ஏற்கனவே பார்த்தோம். ஆகவே ஹி.73-ல் மரணமடையும் பொழுது அவரது வயது 100. ஆகவே புலப்பெயர்வின்பொது (ஹிஜ்ரத்) போது அஸ்மாவின் வயது 27 எனில், அவரைவிட பத்து வயது குறைந்த ஆயிஷாவின் வயது 17 ஆக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த வருடத்தில்தான் இறைத்தூதர் அவரை திருமணம் முடித்தார் என்றும் பார்த்தோம். அதாவது ஆயிஷாவின் 18 ஆவது வயதில் இத்திருமணம் நடைபெற்றது.

மேலும், அத்தபரியில் மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஒரு கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அபுபக்கரின் (ரழி) எல்லா குழந்தைகளும் (நான்கு குழந்தைகளும் –மொழிபெயர்ப்பாளர்) தூதுத்துவப் பணி துவங்கும் முன்னரே பிறந்துவிட்டனர் என்று அத்தபரி கூறுகிறார். ‘உலீது ஃபில் ஜாஹிலிய்யா’ என்று அவர் குறிப்பிடுகிறார். ஆகவே மீண்டும் ஒரு முரணை நாம் சந்திக்கிறோம். ஆகவே, இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய அளவில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து வெளிப்படையாக, அறிவுப்பூர்வமாக விவாதித்து இதைக் களைய முற்படும் முஸ்லிம்கள்தான் இல்லை. 13 நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மரபுகளை கேள்விக்குட்படுத்த அவர்கள் விரும்பவில்லை —மிகச்சிலரைத் தவிர.

அடுத்ததாக, அல் புகாரிக்கு உரை எழுதிய இப்னு ஹஜரின் ‘அல் ஹிஸாபா’ எனும் நூலைப் பார்ப்போம். அதில் இறைத்தூதரின் மகள் ஃபாத்திமா (அலை), கஅபா புனரமைக்கப்பட்ட ஆண்டு பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கஅபா புனரமைக்கப்பட்ட போது கருப்புக் கல்லை யார் எடுத்து வைப்பது என்ற பிரச்சனை உருவாகி அதை இறைத்தூதர் தீர்த்து வைத்த சம்பவத்தை நாம் அறிவோம். அப்போதுதான் ஃபாத்திமா (அலை) பிறந்தார் என்று இப்னு ஹஜர் கூறுகிறார். அப்போது இறைத்தூதரின் வயது 35. ஃபாத்திமா, ஆயிஷாவைவிட ஐந்து வயது மூத்தவர் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. எனில், ஆயிஷா, இறைத்தூதரின் 40ஆவது வயதில் —அதாவது பி’ஸா ஆண்டில்— பிறந்துள்ளார். மேலும் புலபெயர்வின் (ஹிஜ்ரத்) முதல் ஆண்டில் இறைத்தூதர் (ஸல்) அவரை திருமணம் முடித்தார் என்றால், அப்போது ஆயிஷாவின் வயது 14 ஆக இருக்கும். 9 அல்ல. இன்று சலஃபி சிந்தனை கொண்ட பலரும் அவர்களைச் சார்ந்தோரும் மேற்கோள் காட்டும் நூல்தான் ‘அல் ஹிஸாபா’. எனினும் அவர்களே இவ்விஷயங்களைச் சிந்திப்பதில்லை. நாம் அவர்களிடம் கோருவதெல்லாம் ஒன்றுதான்: “கொஞ்சம் கண் திறந்து பாருங்கள். ஆங்காங்கே கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அதிலிருந்து விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது அவ்வளவு கடினமானதா என்ன?”

ஆரம்பகாலங்களில், மக்காவில் இறைத்தூதர் ரகசியப் பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில்தான் அஸ்மாவும், ஆயிஷாவும் முஸ்லிம்களாக மாறினர் என்று இப்னு கசீர் ‘அல் பிதாயா வல் நிஹாயா’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தூதுத்துவப் பிரச்சாரத்தின் ஐந்தாவது ஆண்டு வாக்கில்தான் இறைத்தூதர் வெளிப்படையாகப் பிரச்சாரம் மேற்கொள்ளத் துவங்கினார். எனவே இப்னு கசீர் அவ்வாறு கூறுகிறார். எனில், அவர்களிருவரும் அப்போது முதிர்ச்சி அடைந்தவர்களாக, பிரக்ஞை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று வயது உடையவரைப் பார்த்து அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல முடியாது. இதிலிருந்து, அப்போது ஆயிஷா, முஸ்லிமாக மாறுவதற்கு முடிவெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடன் இருந்தார் என்று நாம் அனுமானிக்கலாம். ஆனால் அல் புகாரியின் கூற்றுப்படி, ஆயிஷா வஹீயின் (இறைச்செய்தி) நான்காவது ஆண்டில் பிறந்தார். எனில், அவர் இஸ்லாத்தை ஏற்ற பொழுது அவர் ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தையாக இருந்திருப்பார். இது எப்படிச் சாத்தியமாகும்?

அல் புகாரியில் ‘பாப் ஜிவாரு அபிபக்ரின் ஃபி அஹ்தின் நபி’ என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இது இறைத்தூதரோடு (ஸல்) அபுபக்கருக்கு இருந்த நெருக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. இதில் ஆயிஷா (ரழி) கூறியதாக ஒரு செய்தி வருகிறது:

لَمْ أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ ىصَلَّ اللَّهُ عَلَيْهِ

وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ ، بُكْرَةً وَعَشِيَّةً

“எனக்கு நினைவு தெரிந்தது முதல், நான் என் பெற்றோரை இஸ்லாத்தை ஏற்றவர்களாகவே அறிவேன். மேலும் ஒரு நாள் கூட விடாமல் இறைத்தூதர் (ஸல்) எங்கள் வீட்டிற்கு காலையிலோ மாலையிலோ வருவதையும் நான் அறிவேன்.” [அல் புகாரி: 2204]

பின்னர் மக்காவில் முஸ்லிம்கள் சமூக விலக்குக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட போது ஹபஷாவிற்கு புலம் பெயர்வது (ஹிஜ்ரத்) குறித்து அபுபக்கர் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஹபஷாவுக்கு புலம் பெயர்ந்தது (ஹிஜ்ரத்) தூதுத்துவத்தின் ஐந்தாவது ஆண்டில் நிகழ்ந்தது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து (முத்தஃபக்குன் அலைஹி). தூதுத்துவத்தின் நான்காவது ஆண்டில்தான் ஆயிஷா பிறந்தார் என்று அல் புகாரி கூறுகிறார் எனில், ஒரு வயதே ஆன அவர் எப்படி இந்நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்க முடியும்? காலையிலோ மாலையிலோ இறைத்தூதர் வருவதையெல்லாம் நினைவில் வைத்து அவர் கூறுகிறார் எனில், எந்த அளவிற்கு ஒருவர் தன் நினைவாற்றலை மீட்டெடுக்க முடியும்? நிச்சயமாக ஒருவர் தன் ஒரு வயது நினைவுகளை மீட்டெடுக்க முடியாது என்பது தெளிவு.

நாம் இங்கு அல் புகாரியை குறை கூறவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இத்தகைய ஹதீஸ்களின் விமர்சனங்களை கேட்கும் சிலர் இவ்வாறு சொல்லக் கூடும்: “இது இப்படித்தான் துவங்கும். முதலில் சில ஹதீஸ்களை ஆய்வு செய்வார்; விமர்சனம் செய்வார். பின்னர் அங்கிருந்து முழு ஹதீஸ் இலக்கியத்தையுமே தாக்க முற்படுவார்”. இத்தகையவர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம்: “குர்ஆனோடு பொருந்திப் போகிற, எம் அருமை இறைத்தூதரின் (ஸல்) பண்புநலன்களோடு ஒத்துப் போகிற, அவருடைய அற ஒழுக்கங்களுக்கு இணக்கமான ஹதீஸ்களை பாதுகாக்க நாமே முதலில் நிற்போம்.” எனினும் நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்த ஹதீஸ் நூல்களிலுள்ள எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்போம் என்பது இதன் பொருள் அல்ல. நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இறுதியாக, அல் புகாரியில் வரும் மற்றொரு செய்தியைப் பார்ப்போம்:

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ‏

இது அல் குர்ஆனில் அத்தியாயம் கமரில் வரும் ஒரு வசனம். இதன் பொருள்: ‘மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனை) காலமாகும். மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும்.’ [54:46]

இந்த வசனம் குறித்து ஆயிஷா (ரழி) இவ்வாறு கூறுவதாக அல் புகாரியில் பதிவாகியுள்ளது:

لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِمَكَّةَ، وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ

“நான் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியாக இருந்த போது இந்த வசனம் இறக்கப்பட்டது” [அல் புகாரி: 4876]

அத்தியாயம் கமர், இறைச்செய்தி (வஹீ) துவங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இறக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த வசனம் இறக்கப்பட்டதை ஆயிஷா (ரழி) நினைவில் வைத்துள்ளார் எனில் அப்போது அவருக்கு என்ன வயது இருக்கும்? அல் புகாரியின் கூற்றுப்படி பார்த்தால், அவருக்கு ஒரு வயது இருக்கும். தூதுத்துவத்தின் ஐந்தாவது ஆண்டில் கமர் அத்தியாயம் இறங்கியிருந்தால், அப்போது ஆயிஷா ஒரு வயதை அடைந்திருப்பார். மாறாக அவ்வத்தியாயம் நான்காவது ஆண்டில் இறங்கியிருந்தால் அப்போது அவர் பிறந்தே இருக்கமாட்டார். ஆனால் அவ்வசனம் அவரது கவனத்தை ஈர்த்திருந்தது என்று அறிகிறோம். அது இறங்கியதை நினைவில் வைக்கும் அளவிற்கு அவர் வளர்ந்திருப்பார் என்பது தான் இதன் அர்த்தம்.

இந்த அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அல் புகாரி சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? எது அறிவார்ந்ததாகப் படுகிறது? இத்தகைய தகவல்களை ஏன் நாம் 13 நூற்றாண்டுகளாக சுமந்து வந்துள்ளோம்? நாம் கண் விழித்து, ஏதோ தவறு நடந்துள்ளது என்று உணராதவரை இந்தப் பிரச்சனைகள் நம் இஸ்லாமிய உள்ளத்தை, நம் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கும். இந்தத் தவறைத்தான் நாம் சரி செய்ய முற்பட்டுள்ளோம்.

பரிசுத்தமும் உயர்வும் உள்ள அல்லாஹ் தன் வேதத்தில் இறைத்தூதரை (ஸல்) புகழ்ந்து, கண்ணியப்படுத்தி இவ்வாறு கூறுகிறான்:

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ

மேலும் (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். [68:4]

மேலும் மற்றொரு வசனத்தில், அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. [33:21]

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகிவிட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் நம்பிக்கையாளர்கள்மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக! [9:128,129]

எனதருமைச் சகோதர சகோதரிகளே! நம் மார்க்கம் ‘அல் ஃபித்ரா’ நிலை மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) குறிப்பிட்டுள்ளார். அதாவது, மனிதகுலம் முழுமைக்கும் உரிய பரிசுத்த இயற்கை நிலையான, மாசற்ற மானுட இயற்கை நிலை மார்க்கம் என்று குறிப்பிட்டுள்ளார். நம் தூதரும் நம் மார்க்கமும் அதே நிலையை கொண்டவர்களே. அப்படியிருக்க, அவர் ஆறு வயதே ஆன ஒருவரை திருமணம் முடிக்கக் கேட்டார் என்றும் அவர் ஒன்பது வயதை அடைந்தவுடன் திருமணம் முடித்தார் என்ற தகவலைக் கேட்கும் பொழுது, இதுதான் ‘ஃபித்ரா’ நிலையா என்ற கேள்வி எழுகிறது. இறைவன் நமக்கு அளித்த இயற்கை நிலை இதுதான் என்று யாராவது சொல்ல முடியுமா? ஆனால் அதிகாரத்தில் இருந்து கொண்டு பெண்களைத் துன்புறுத்துபவர்கள் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள். நம் மௌனமும் அவர்களுடைய குற்றங்களுக்கு துணை போகிறது.

♣ ♣ ♣ ♣ ♣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *