முஹம்மது அபூ ஸஹ்ரா

முஹம்மது இப்னு அஹ்மது இப்னு முஸ்தஃபா அபூ ஸஹ்ரா, 1898 மார்ச் 29 அன்று, கீழ்எகிப்தின் பிராந்தியத் தலைநகர்களுள் ஒன்றான அல்-மஹல்லா அல்-குப்ராவில் பாரம்பரியம் மிக்கதொரு குடும்பத்தில் பிறந்தார். சிறுவன் முஹம்மது அபூ ஸஹ்ரா, குர்ஆனைக் கற்றுத் தரும் இளஞ்சிறார் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின், ஆயிரமாண்டுப் பாரம்பரியம் வாய்ந்த அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பெறும் துவக்கநிலைப் பள்ளியில் சேர்ந்து, தன் கல்வியைத் தொடர்ந்தார். உயர்நிலைப் பள்ளிக்கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் 1913-ல், தாண்டாவின் அஹ்மதீ மஸ்ஜிதோடு இணைந்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.

அவருடைய இயல்பான புத்திக்கூர்மையும், இஸ்லாமியக் கற்கைகளிலான மெய்யான ஆர்வமும் அவரை அங்கு பிரகாசிக்கச் செய்தன. அவர் தன்னுடைய சகாக்களிடமும் ஆசிரியர்களிடம் பரந்த நன்மதிப்பை வென்றெடுத்தார். எனவே, 1916-ல் இஸ்லாமிய நீதிபதிகளுக்கான நிறுவனத்தின் நுழைவுத் தேர்வில் முதல் தரத்தினராய்த் தெரிவானது எவர்க்கும் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. விண்ணப்பித்திருந்தோரில் அநேகர், இவரைக் காட்டிலும் வயதில் பல்லாண்டுகள் மூத்தோர்; வெவ்வேறு பள்ளிகளில் நெடுங்காலமாய்க் கற்று வந்திருந்தோர். பட்டம் பெற்றதற்குப் பிறகு, முதலில் அல்-அஸ்ஹரின் உசூல் அல்-தீன் துறையிலும், பின் சட்டத்துறையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலாவது, இஸ்லாமியச் சிந்தனை தனித்துறைப் பயிற்சிக்கானது. இரண்டாவது, பல்கலைக்கழக மட்டத்திலான வழமையான சட்டத்துறை. இத்துறையில் அபூ ஸஹ்ராவின் தனித்துறைப்பயிற்சியானது இஸ்லாமிய சட்டம் என்பதாக இருந்தது என்பதைத் தனியே கூறவேண்டியதில்லை. கற்பித்தல் துறையிலான அவரது முன்னேற்றம் அவரை 1958-ல் இஸ்லாமியச் சட்டத்துறை தலைவராகவும், ஷரீஆ பேராசிரியராகவும் உயர்த்தியது.

அறுபது வயதினராய் ஆனபோது, கற்பித்தலில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகும் கூட, 1962-ல் அல்-அஸ்ஹரின் ஆய்வுக் கழகத்தில் இணைந்து பணியைத் தொடர்ந்தார். குர்ஆனை மனனம் செய்வதே தனது துவக்கநிலைப் பள்ளிப் படிப்பாய் அமைந்ததென அபூ ஸஹ்ரா குறிப்பிடுகிறார். இளம் பிராயத்தினராய் இருந்தபோதே குர்ஆனை மனனம் செய்து முடித்தார். அப்பிராயத்திலேயே இரு தனித்தன்மைகள் அவரில் எடுப்பாய் தென்பட்டன. முதலாவது, சுதந்திரச் சிந்தனை; “பிடிவாதம் பிடித்தவன்” என்பதாக பிறர் அவரை அழைத்திட இது காரணமாயிற்று. இரண்டாவது, அனைத்து மட்டங்களிலுமான எதேச்சதிகாரப் போக்கின் மீது அவருக்கிருந்த வெறுப்பு. அவரது பருவமெய்தலுக்குப் பிந்தைய வாழ்விலும் இத்தனித்தன்மைகள் அவரில் தொடர்ந்து பிரதிபலித்தன. வலுமிக்க எதிர்ப்பு வரினும், தான் எதைச் சத்தியம் என நம்பினாரோ அதற்காக எழுந்து நிற்கும் துணிச்சலை இவை அவருக்கு வழங்கின.

முஹம்மது அபூ ஸஹ்ரா, விளைவு வளமிக்கதோர் எழுத்தாளர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார். அவரது முதல் நூல், இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்தம் வாழ்நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஆகியவை பற்றியது. அது மூன்று தொகுதிகளால் ஆன நீண்டதொரு வரலாற்று நூலாகும். தன்னுடையது போன்று சிறு பகுதியையேனும் முடிந்தால் தொகுத்துருவாக்குமாறு அல்-குர்ஆன், படைப்பினங்கள் அனைத்திற்குமான சவால் ஒன்றை விடுத்து நிற்கிறது. அத்தகு குர்ஆனின் தனித்துவ பாணியினது தன்னிகரற்ற பண்புகளைச் சிறப்புற எடுத்துரைக்கும் ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார். குர்ஆனின் பல்வேறு அணுகுமுறைகளைக் குறித்த ஆழமானதொரு ஆய்வினை அவர் இந்நூலில் முன்வைக்கிறார். குர்ஆன், ஒரே கதையைப் பலமுறைகள் திரும்பத் திரும்பக் கூறிய போதிலும், ஒவ்வொரு முறையுமே அவற்றின் மீது வெவ்வேறு ஒளியைப் பாய்ச்சுவதன் மூலம், அதனை முற்றிலும் புதியதொன்றாக ஒலிக்கச் செய்கின்றமை பற்றிய ஆய்வு அவற்றுள் குறிப்பிடத்தக்கது.

ஆயினும், அவரது நூல்களில் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்களே. அவை ஒவ்வொன்றையும் அவர், இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம். இவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் வைத்திருந்த ஆழ்ந்த அன்பையும் மகத்தான மதிப்பையும் இவை பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில், இம்மாபெரும் அறிஞர்களின் ஆழ்ந்த இஸ்லாமிய புலமைத்துவம், அவர்கள் பாவித்த வெவ்வேறு முறைமைகள் ஆகியவற்றுக்கு உள்ளானதோர் அகப்பார்வையை இவை நமக்கு வழங்குகின்றன. அவர் இச்சரிதைகளை மிக விரிவானவையாக அமைத்திருப்பதால் அவ்வறிஞர்கள் மீதும், அவர்தம் புலமைத்துவம் மீதும் செல்வாக்கு செலுத்திய முக்கிய பொதுப் போக்குகளின் உண்மைச் சித்திரத்தை வரைவதை இவை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கின்றன. பின், அவர்கள் பின்பற்றிய முறைமைகள் பற்றி கலந்துரைடுகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிற முக்கியமான கண்ணோட்டங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

அவருடைய பிற ஆக்கங்கள், இஸ்லாமியச் சட்டத்துறையின் பரந்த வீச்சிலான தலைப்புகளைத் தழுவியனயாக அமைந்திருக்கின்றன. இவ்வாறு, சொத்துரிமை பற்றியதொரு நூல் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. மற்றுமொரு நூல், ஷியாப் பள்ளிகளுள் ஒன்றான ஜாஃபரிய்யா சட்டப் பள்ளியின் அடிப்படையில் சொத்துரிமை பற்றியது. இஸ்லாமியச் சட்டத்தில் ‘குற்றம்’ என்பதன் தத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கென ஒரு முழு நூலையே ஒதுக்கியிருக்கிறார். மற்றுமொரு நூலை, தண்டனைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு ஒதுக்கியிருக்கிறார். தனிமனித-குடும்ப சட்டங்கள், திருமண ஒப்பந்தம், வக்ஃப், உடமைத்துவம், உடன்படிக்கைகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டைத் தழுவியனவாக அவருடைய பிற சட்டத்துறை ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன.

மதஒப்பீடு பற்றியும் அபூ ஸஹ்ரா விரிவாக எழுதியிருக்கிறார். கிறித்தவம் குறித்து ஒரு நூல், பிற நம்பிக்கைகள் குறித்து ஒரு நூல் என இரு நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்க மற்றொரு நூல், இஸ்லாமிய ஃபிக்ஹின் முறைமைத்துவக் கோட்பாடுகள் பற்றிய பாடநூல். அதே போன்று, இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பு, இஸ்லாமியச் சமூகத்தின் இயல்பு என சமூக விவகாரங்களைக் குறித்தும் அவர் நூல்கள் இயற்றியிருக்கிறார். இவ்வெளியிலான தனது மூன்றாவது நூலை, முஸ்லிம் சமுதாயத்தில் சமூகப் பாதுகாப்பு என்ற தலைப்பிற்காக ஒதுக்கியிருக்கிறார். அவரது நூற்தலைப்புகளை வெறுமனே வாசிப்பதே கூட, அவரது புலமைத்துவம், அறிவுத்திறம் பற்றிய தெளிவை நமக்கு வழங்கப் போதுமானதாயிருக்கிறது.