இஸ்லாமிய வரலாறு – 15 / இப்னு தைமியா சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி


இஸ்லாமிய வரலாறு – 15 / இப்னு தைமியா சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
♣ ♣ ♣ ♣ ♣
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழி பெயர்த்து, 2 பாகங்களாகப் பிரித்து, தலைப்புகளை அளித்துள்ளோம். – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 03-02-2009, இடம்: வாஷிங்டன் டி.சி., அமெரிக்கா
♣ ♣ ♣ ♣ ♣
இம்முறை ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் மீது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்திய —இன்றும் ஏற்படுத்துகிற— மற்றொரு இஸ்லாமிய ஆளுமை பற்றிய ஒரு புரிதலை அடைய முயற்சிப்போம். இன்று இப்னு தைமியா பற்றிய சில குறிப்புகளை அலசப் போகிறோம். நிச்சயமாக இப்பெயரை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வஹாபி அல்லது சலஃபி என்று அறியப்படும் சவூதி அரேபியாவில் உள்ள சமய நிறுவனத்துடன் கிட்டத்தட்ட இயல்பாகவே இப்பெயர் அடையாளப் படுத்தப்படுகிறது. இப்னு தைமியா ஹி. 661 இல் பிறந்து 67 வயது வரை வாழ்ந்து ஹி. 728 இல் மறைந்தார்.
புலப் பெயர்வு
குறிப்பிட்ட ஒரு நிகழ்வைக் கூறி இதைத் தொடங்குவோம். ஹி. 668 இல் ஒரு குடும்பம் ஹர்ரானில் இருந்து டமாஸ்கசுக்கு குடிபெயர்ந்தது. அதில் ஏழு வயது சிறுவர் ஒருவர் இருந்தார். ஹர்ரான் என்பது இன்றைய ஈராக்கின் டைக்ரிஸ் (திஜிலா) மற்றும் யூஃப்ரடீஸ் (ஃபுராத்) நதிகளுக்கிடையே உள்ள ஒரு நகரம் ஆகும். அவர்கள் குடிபெயர்ந்ததற்குக் காரணம், அன்று அங்கு நிலவிய நிலையற்ற தன்மை என்று நம்மால் பொதுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றும் கூட அப்பகுதி —குறிப்பாக ஈராக்— நிலைத்தன்மை இன்றிதான் காணப்படுகிறது. எனவே அக்குடும்பம் டமாஸ்கசுக்குக் குடிபெயர்ந்தது. அன்று டமாஸ்கசும் கெய்ரோவும் அறிஞர்களை ஈர்க்கும் நகரங்களாகத் திகழ்ந்தன.
இப்னு தைமியா பிறந்து, வளர்ந்து, தன் வாழ்வைத் துவங்கிய அக்கால கட்டத்தை நாம் நன்றாகப் புரிந்து கொள்வது அவசியம். கெய்ரோவையும் (காஹிரா) டமாஸ்கசையும் (திமஷ்க்) அறிஞர்களின் புகலிடம் என்பதாக மாற்றிய இரண்டு நிலையற்ற தன்மைகள் அன்று முஸ்லிம் உலகில் நிலவின. ஒன்று ஈராக்கில் நடந்த மங்கோலியர்களின் (தார்த்தாரியர்கள்) ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட விளைவுகள்.
இன்றும் இதுதானே நடக்கிறது! அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்! ஐம்பது லட்சம் அகதிகள்! மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் ஆறில் ஒருவர் உள்நாட்டு அகதியாக அல்லது நாட்டை விட்டே வெளியேறியவராக உள்ளார். ஐம்பது அல்லது அறுபது லட்சம் அனாதைகள், பத்து லட்சம் விதவைகள் அங்கு உள்ளனர். மிகவும் நிலையற்ற, மக்களை வெளித்தள்ளும் சமூகமாக இன்றைய நிலைமை இருக்கிறது. அது மக்களை, குடும்பங்களை நாட்டை விட்டு வெளியேற பலவந்தப்படுத்துகிறது.
இப்னு தைமியா பிறந்து அவருடைய குடும்பம் ஈராக்கிலிருந்து வெளியேறி, வசிப்பதற்கு ஏதுவான, அபாயம் குறைந்த பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்த போதும் சூழல் இப்படித்தான் இருந்தது. புலம் பெயரும் இன்றைய குடும்பங்களைப் போலத்தான் அன்றைய குடும்பங்களின் நிலமையும் இருந்தது. இக்காரணங்களால் ஈராக்கை விட்டு வெளியேறிய அறிஞர்களை கவரும் நகரமாக டமாஸ்கஸ் மாறியது. இப்னு தைமியாவின் தந்தை ஹதீஸ் அறிஞராக இருந்தார்.
மற்றொரு நிலையற்ற தன்மை அல் அந்தலூஸில் நிலவியது. ஏராளமான முஸ்லிம்களும், அறிஞர்களும் அங்கிருந்து வெளியேறி வட ஆப்பிரிக்காவில் குடியேறினர். அறிஞர்களைப் பொருத்தவரை வட ஆப்பிரிக்காவில் மற்ற இடங்களைக் காட்டிலும் கெய்ரோதான் அவர்களை ஈர்க்கும் முதன்மை நகரமாகத் திகழ்ந்தது. எனவே அவர்கள் எங்கு சென்றாலும் கடைசியில் கெய்ரோவுக்கு வந்து அங்கேயே குடி அமர்ந்தனர். ஆக குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட அச்சூழலில் டமாஸ்கசுக்கும் கெய்ரோவுக்கும் இடையே ஒரு ஒற்றுமை வெளிப்பட்டது.இத்தகைய சூழலில்தான் இப்னு தைமியாவின் குடும்பம் ஈராக்கில் இருந்து வெளியேறி டமாஸ்கசுக்கு குடிபெயர்ந்தது.
இப்னு தைமியாவின் பெயர் மிக நீளமானது. ஆனால் அவருடைய சுருக்கப் பெயர் அஹ்மது தகி அத் தீன் இப்னு தைமியா ஆகும். அவர் ஹி. 661இல் ரபீஉல் அவ்வல் 10ஆம் நாளில் பிறந்தார். வேறு சில அறிஞர்கள் அவர் ரபீஉல் அவ்வல் 18 இல் பிறந்தார் என்கின்றனர். இங்கு இறைத்தூதரின் பிறந்த தேதியுடன் இவருடைய பிறந்த தேதியை ஒருங்கிணைக்கச் செய்ய மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியின் சாத்தியத்தை நாம் ஒதுக்கிவிட முடியாது. நிச்சயமாக இது அவரை வியந்து பாராட்டி உயர்வாக நினைப்பவர்களிடமிருந்து வந்திருக்கும்.
இப்னு தைமியாவுக்கு 21 வயது இருந்தபோது, ஹி.682 இல் அவருடைய தந்தை மரணமடைந்தார். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவருடைய தாயும் மரணித்தார். அவருடைய தாய் மரணித்த ஆண்டு துல்லியமாகக் கிடைக்கவில்லை. ஆனால் எகிப்தில் ஒருமுறை அவர் சிறைப்பட்டிருந்த போது அவருடைய தாய் மரணம் அடைந்தார். பின்னாட்களில் இப்னு தைமியா எகிப்துக்குச் சென்றார் என்றும் அவர் நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் நாம் பார்ப்போம். இப்னு தைமியா தன் தாயை அதிகம் நேசித்தார். அவரோடு மிகவும் பிரியமானவராக இருந்தார். எகிப்தில் இருந்த போதும் தாயுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். அக்கடிதங்களைப் பார்க்கும்போது, அவருக்கும் அவருடைய தாய்க்கும் இடையே இருந்த உருக்கமும் நேசமும் வெளிப்படுகிறது.
அறிவுப் புலமை
இப்னு தைமியாவின் தந்தை —இன்றைய மொழியில் சொல்வதானால் —ஹதீஸ் ஆசிரியராக இருந்தார். அவர் டமாஸ்கசில் ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரு பேராசிரியர் போல இருந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, 21 வயதே ஆன இப்னு தைமியா அவ்விடத்தை நிரப்பினார். இது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அப்படிச் செய்வதற்கு நல்ல தரமான பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். அதை அவர் பெற்றிருந்தார். அவரை எதிர்ப்பவர்கள் கூட அவருடைய கல்வித் திறனை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அவருடைய கருத்துகளை ஒருவர் ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் அவர் அறிவுத்திறன் மிக்கவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்னு தைமியா,அந்த இளம் வயதில் வகுப்புகள் நடத்தும் போது கையில் புத்தகமோ குறிப்புகளோ இல்லாமலேயே பாடம் நடத்துவார். பாடங்களை எழுதி வைத்துத் தயார் செய்து வகுப்புகளை நடத்தமாட்டார். மாறாக, கூர்மையான நினைவாற்றலோடு, தன்னியல்பாகவே பாடங்களை நடத்துவார். இப்படியே அவருடைய வகுப்புகள் 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் என்றில்லாமல் மணிக்கணக்கில் நீளும். இது அவருடைய பிரத்தியேகக் கற்பித்தல் முறை ஆகும்.
மற்ற அறிஞர்களைப் போலல்லாமல், இப்னு தைமியா அறிவுப்புலமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இமாம் அபூ ஹனீஃபா வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர்; அவர் கடைவீதிக்கு செல்வார்; வணிக விஷயங்களில் ஈடுபடுவார் என்று பார்த்தோம். ஆனால் இப்னு தைமியாவோ முற்றிலும் அறிவார்ந்த சூழலில் வளர்ந்தார். அவருடைய தந்தை ஒரு அறிஞர். அவருடைய குடும்பம் கல்வித்திறன் மற்றும் அறிவுப் புலமையை பெரிதும் மதித்தது.
இங்கு மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இப்னு தைமியாவின் பூர்வீகம் குறித்து சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. நான் ஆய்வு செய்த பல அறிஞர்கள் ‘அவர் அரேபியர் அல்ல’ என்கின்றனர். ‘அவருடைய பூர்வீகம் அரேபிய தீபகற்பத்தில் இல்லை’ என்கிறனர். ஆனால் ஒரு சில அறிஞர்கள் அவருடைய பூர்வீகத்தை ஆராய்ந்து அவர் அரேபியப் பின்னணி கொண்டவர்தான் என்று நிறுவியுள்ளனர். இத்தகவல் யாருக்கு என்ன அர்த்தம் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியாது. எனினும் இதை உங்கள் முன் வைப்பது அவசியம் எனக் கருதுகிறேன். அரேபியராக இல்லாதபட்சத்தில், ஈராக்கிலிருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவர் ஒரு பாரசீகராகவோ துருக்கியராகவோ இருக்கக் கூடும்; அல்லது இரண்டும் கலந்த ஒருவராக இருக்கக் கூடும். இதைத் தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.
நாம் ஏற்கனவே பார்த்த அறிஞர்களைப் போல, இவரும் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். அதற்கடுத்து —மீண்டும் பிற அறிஞர்களை போலவே— இறைத்தூதரின் செய்திகளில் (ஹதீஸ்) தனக்கிருந்த ஆர்வத்தால் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவருடைய தந்தை உயர்மட்ட கல்வி நிறுவனத்தில் ஹதீஸ் துறை அறிஞராக இருந்ததால் ஹதீஸை கற்று, புரிந்து கொள்ளும் சிறப்பான வாய்ப்பை இயல்பாகவே அது அவருக்கு அமைத்துக் கொடுத்தது.
அவருடைய பண்புகளில் சில பின்வருமாறு: வளரும் பருவத்தில் அவர் மிகவும் கறாரானவராக இருந்தார். பொதுவாக சிறுவர்கள் விளையாட்டு, ஊர் சுற்றுவது, கேளிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டு காலம் கழிப்பர். ஆனால் இப்னு தைமியா அப்படிப்பட்டவர் அல்ல. அவர் தன் ஓய்வு நேரத்தை கேளிக்கைகளில் ஈடுபட்டு செலவழிக்கவில்லை. அவர் தன்னளவிலும் பிறரிடத்திலும் மிகவும் உணர்வுப்பூர்வமானவராக இருந்தார்.
மக்களுள் சிலர் தம்மைச் சுற்றி நடப்பவை குறித்து பராமுகமாக இருப்பர். வேறு சிலர் தங்களைச் சுற்றி நடப்பவை, தங்கள் குடும்பத்தில், உள்ளூரில் நடப்பவை குறித்து அறிந்து வைத்திருப்பர். ஆனால் அதைத் தாண்டி உள்ள விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இன்னும் சிலர் வெளித் தொடர்பின்றி முற்றிலும் தங்களுக்குள்ளாகவே வாழ்க்கையை கழிப்பர். இப்னு தைமியா தன்னைச் சுற்றி நடப்பவை குறித்தும் அதைத் தாண்டியும் உள்ள நிகழ்வுகள் குறித்து விழிப்புடன் இருந்தார். சமகால நிகழ்வுகள் குறித்து தன் கவனம் எந்த அளவுக்கு விரியுமோ அதுவரை உள்ள நிகழ்வுகள் குறித்து விழிப்புடன் இருந்தார். அவருடைய நினைவாற்றல் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய சகாக்கள் மத்தியில் அவரது நினைவாற்றல்தான் ஒரே பேச்சாக இருந்தது. ‘இவை அனைத்தையும் எப்படி இவரால் மனனம் செய்ய முடிகிறது!’ என்று அவர்கள் பேசிக் கொள்வர்.
இப்படியாக அஹ்மது தகி அத்தீன் இப்னு தைமியா சிறு வயது முதலே அறிவுப் பாதையில் பயணம் மேற்கொண்டார். அன்றைய அறிஞர்களைப் போலவே முதலில் குர்ஆன், பிறகு ஹதீஸ், அதைத் தொடர்ந்து சட்டவியல் (ஃபிக்ஹ்) பயின்றார். அந்த காலகட்டம் பல சிந்தனைப் பள்ளிகள் நன்கு வேரூன்றிவிட்ட காலமாக இருந்தது.
இப்னு தைமியாவின் குடும்பம் ஹன்பலி சிந்தனைப் பள்ளியை பின்பற்றக்கூடியதாக இருந்தது. எனவே அவரும் தன்னை ஒரு தீவிர ஹன்பலி பின்பற்றாளராகக் கருதினார். மேலும் அவர் அரபி மொழியை மிக ஆழமாக கற்றார். அரபி மொழியின் இலக்கணம், அதன் கவிதைகள், பண்டைய அரபி மொழி, அதன் வரலாறு என அதோடு தொடர்புடைய அனைத்தையும் கற்றார். அவருக்கு முன்சென்ற ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகால இஸ்லாமிய வரலாற்றின் மீதும் அவர் கவனம் செலுத்தினார். அரபு மொழி இலக்கணத்தில் அவருக்கு உறுதியான பிடிப்பு இருந்தது. அவருடைய உரைகள் மற்றும் அவர் நடத்திய வகுப்புகளில் இது வெளிப்பட்டது. இது மட்டுமின்றி கணிதம் மற்றும் மெய்யியலிலும் அவருக்கு பரிச்சயம் இருந்தது.
அச்சமயத்தில், இஸ்லாமிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட வேறு சில அறிஞர்களும் டமாஸ்கஸில் இருந்தனர். அவர்களில் அல் இஸ் இப்னு அப்துஸ் ஸலாம் மற்றும் மொஹித்தீன் அன் நவவி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும் டமாஸ்கஸிலேயே வாழ்ந்த அறிஞர்கள் ஆவர். கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளைப் பார்க்கும் போது அஷ்அரி சிந்தனைப் பள்ளி பற்றி பார்த்தோம். இப்னு தைமியாவின் காலத்தில், அவர் வாழ்ந்த ஷாம் மற்றும் எகிப்து பகுதிகளில் அஷ்அரி கோட்பாடு பிரதானமாக இருந்தது.
அபூ ஹசன் அல் அஷ்அரி சொன்ன கோட்பாடு, முஸ்லிம்களை பிளவுபடுத்திய விஷயங்கள் குறித்து அவர் என்ன சொன்னார் என்று முன்னர் பார்த்தோம். அபூ ஹசன் அல் அஷ்அரி ஆரம்பத்தில் ஒரு முஃதசிலியாக இருந்தார். பின்னர் அதிலிருந்து பிரிந்தார் என்றாலும் தான் கொண்டிருந்த தர்க்க மற்றும் மெய்யியல் சார்ந்த பின்னணியை அவர் கைவிடவில்லை. ஆனால் இக் கோட்பாடு ஹன்பலிகளோடு ஒத்துப் போகவில்லை. பாக்தாதில் அஹ்மது இப்னு ஹன்பலுக்கு என்ன நிகழ்ந்தது என்று நாம் முன்னர் பார்த்தோம். ஹன்பலிகளுக்கும் அஷ்அரிகளுக்கும் இடையே இருந்த இந்த உராய்வில் இப்னு தைமியா ஹன்பலிகள் பக்கம் நின்றார். அவர் தன்னை ஒரு அஷ்அரியாகக் கருதவில்லை.
இதைக் கேட்கும் போது சிலருக்கு வினோதமாகத் தோன்றும். ‘இவர்கள் இருவரும் சன்னிகள் தானே!’ என்று கேட்கத் தோன்றும். ஆனால் இது அத்தனை எளிதானது அல்ல. இதில் பல அம்சங்கள் உள்ளன. அஷ்அரிகளுக்கும் ஹன்பலிகளுக்கும் இடையே தீவிர கருத்து வேறுபாடுகளும் உராய்வுகளும் இருந்தன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இப்னு தைமியா அஷ்அரிகளுக்கு எதிராக இருந்தார் என்று தாராளமாகச் சொல்லலாம். இப்னு தைமியாவின் கருத்துப்படி, அஷ்அரிகள் குர்ஆன் வசனங்களுக்கு அவற்றின் அசல் பொருளையும் தாண்டி மேலதிகமான பொருளை ஏற்றிக் கூறுபவர்களாக இருந்தனர். சிலர், குறிப்பாக ஹன்பலிகள், அவ்விளக்கங்களை வெறும் அபிப்பிராயம் என்றும் அவை அவ்வசனங்களின் பொருள் அல்ல என்றும் கருதினர்.
சூஃபிகள்
இப்னு தைமியா தன் தந்தையின் இடத்தில் நின்று கற்பிக்கத் துவங்கிய போது அவருக்கென்று ஒரு நற்பெயர் ஏற்பட ஆரம்பித்தது. அவருடைய வகுப்புகள் பிரபலமடையத் துவங்கின. அவருடைய கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்கள் மத்தியிலும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் மத்தியிலும் அவருக்கென தனி அங்கீகாரம் கிடைத்தது. இப்னு தைமியாவோடு முரண்படும் சிலர், ஒரு சார்புநோக்கோடு அப்படிச் செய்கின்றனர். நாம் அப்படியல்ல. ஏற்கனவே சொன்னது போல நாம் அவரோடு உடன்படலாம் அல்லது உடன்படாமல் போகலாம்; ஆனால் நாம் பக்கச் சார்பின்றி அவரை அறிய முற்படுகிறோம். இதைச் சொல்லும் போது இப்னு தைமியா தன் பாடங்களில் சூஃபிகளோடு உள்ள முரண்பாடுகளில் கூர்மையாக இருந்தார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.
அவருடைய காலத்தில் தசவ்வுஃப் மற்றும் சூஃபியிசம் பிரபலமாக இருந்தன. தன்னைச் சுற்றி வியாபித்திருந்த பல்வேறு சூஃபி போக்குகளிலிருந்து வெளிப்பட்ட அத்துமீறல்களை அவரால் கிட்டத்தட்ட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சூஃபி போக்குகள் சிலவற்றில் மூடநம்பிக்கைகளும் கட்டமைக்கப்பட்டிருந்தன. இவற்றை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்வது மிக அவசியம். இப்னு தைமியா போர்ச் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்தார். அரசியல், ராணுவ மற்றும் தத்துவார்த்த நடவடிக்கைகள் பல அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தன. அவருடைய வாழ்க்கை அமைதிச் சூழலில் அமையவில்லை. சில சூஃபிகள் தார்த்தாரிய ஆக்கிரமிப்புச் சக்திகளோடு நட்பு பாராட்டுவதை அவர் கண்டார். இது அவரை எரிச்சலூட்டியது. சூஃபிகளின் சிந்தனைகளை, கோட்பாடுகளை எதிர்த்ததோடு மட்டுமின்றி அவர்களுடைய இந்த அரசியல் நடவடிக்கைகளையும் அவர் எதிர்த்தார். போரில் ஈடுபட்டு அச்சுறுத்தும் ஆக்கிரமிப்பு சக்திகளோடு சூஃபிகள் எப்படி நட்பு பாராட்டுகின்றனர் என்பது அவருக்கு புலப்படவில்லை. மேலும் சில தார்த்தாரிய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக மதம் மாறினர். ஆனால் அது பெயரளவிலான மாற்றமாகவே இருந்தது. அவர்கள் கடைப்பிடித்த கொள்கைகள் இஸ்லாத்தோடு தொடர்பற்றவையாக இருந்தன. ஆக இப்னு தைமியா பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய பண்புகள் வெறுமையிலிருந்து பிறக்கவில்லை.
இப்னு தைமியா தன் உரைகளில் சூஃபிகளுக்கு எதிராகப் பேசும்போது பெரும்பாலும் பெயர் குறிப்பிடாமல், பிரச்சனைகளை முன்னிறுத்தி கருத்துகளை மறுத்துப் பேசுவார். எனினும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்களும் சரி, அவருடைய சூஃபி எதிர் தரப்பினரும் சரி, அவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்பதை விளங்கிக் கொண்டனர். இதனால் அவர் எதிரிகளை சம்பாதிக்கத் தொடங்கினார்.
இரண்டு தரத்திலான வகுப்புகளை நடத்துவது அவருடைய வழக்கமாக இருந்தது. ஒன்று பொது வகுப்பாக இருந்தது. பொதுமக்களுக்காக டமாஸ்கஸின் இஸ்லாமிய ஹதீஸ் கல்வி நிறுவனத்தில் இவ்வகுப்புகள் நடைபெற்றன என்று வைத்துக் கொள்வோம். இது தவிர கிட்டத்தட்ட சிலர் மட்டும் பங்கு பெற்ற மற்றொரு வகுப்பையும் அவர் நடத்தினார். தான் பெற்ற அறிவிலிருந்தும் தன்னுடைய புரிதலிலிருந்து மேலதிக சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதால் சங்கடத்துக்கு உள்ளாகாத சிலர் மட்டும் இதில் கலந்து கொண்டனர். இதில் எல்லோர் மத்தியிலும் சொல்ல முடியாத, விரிவாகப் பேச முடியாத சில கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அன்று சிரியாவின் பல பகுதிகள் பெரும்பாலும் சூஃபி பகுதிகளாக இருந்தன. அதில் ஒன்று பிரபல நகரமான ஹமா ஆகும். வரலாற்று ரீதியாகவும் இன்றும் கூட சமயப் பற்று மிக்க நகரம் அது. அன்று அங்கு வாழ்ந்த பெரும்பாலோர் சூஃபிகளாக இருந்தனர். அவர்கள் இப்னு தைமியாவிடம் “‘அலல் அர்ஷிஸ்தவா’ என்பதை எங்களுக்கு விளக்குங்கள்” என்றனர். அன்று அவர்களுக்கிடையே இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. “அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். குர்ஆனின் சொற்களை நாங்கள் விளங்குகிறோம். ஆனால் இது குறிப்பாக எதை உணர்த்துகிறது என்று எங்களால் சொல்ல முடியவில்லை” என்று சொன்னவர்களைப் பற்றி ஏற்கனவே முந்திய அத்தியாயங்களில் பார்த்தோம். அதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆக ‘அலல் அர்ஷிஸ்தவா –பரிசுத்தமான அல்லாஹ் அரியணையின் மீது அமைந்தான்’ என்பதை விளக்குமாறு அவர்கள் இப்னு தைமியாவிடம் கேட்டனர். இது நம் சிந்தனையின் வளர்ச்சி பெறாத பகுதியைச் சார்ந்த ‘முதஷாபிஹாத்’ வகை வசனம் ஆகும்.
இதைக் கேட்ட இப்னு தைமியா, ஒரு ஹன்பலி எப்படி இதற்கு பதிலளிப்பாரோ அப்படியே பதிலளித்தார். அவர் சொன்னதாவது: “‘அலல் அர்ஷிஸ்தவா’ என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் சாதாரண ஒரு மனிதன் விஷயத்தில் இதை எப்படி புரிந்து கொள்வோமோ அப்படி அல்லாஹ்வின் விஷயத்தில் இதை புரிந்து கொள்ள முடியாது”. இதை வைத்து அவர்கள் பிரச்சனை செய்தனர். “நீர் என்ன சொல்ல வருகிறீர்? அல்லாஹ்வுக்கு உடல் இருக்கிறது; அல்லாஹ்வுக்கு பௌதீகத் தன்மை உண்டு என்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அவர் “அது அப்படி அல்ல” என்றார். இது அவர்களுக்கிடையே எழுந்த ஒரு முரண் மட்டுமே. இந்த விவாதம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது. பிரச்சனை குறிப்பாக இந்த வசனத்தைப் பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. இது போல பிற குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.
‘நாங்கள் எதிர்பார்க்கும் பதில் உங்களிடமிருந்து வரவில்லை. எனவே இதை நீதிமன்றத்தில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். அன்று நீதிமன்றங்கள், ஹனஃபி என்றும் ஷாஃபியீ என்றும் தனித்தனி வரம்புகளுக்கு உட்பட்டு இருந்தன. அந்த சூஃபிகள் அவரை ஹனஃபி நீதிமன்றத்துக்கு இட்டுச் செல்ல விரும்பினர். ஹனஃபி நீதிமன்றத்தில் அபிப்பிராயங்களுக்கும் குர்ஆன் வசனங்களுக்கு பகுத்தறிவு ரீதியான விளக்கங்களுக்கும் இடமிருந்தது. ஆனால் இப்னு தைமியா ஷாஃபியீ நீதிமன்றத்துக்குச் செல்லவே விரும்பினார். ஷாஃபியீ நீதிமன்றம் அவருடைய நிலையைப் புரிந்து கொண்டது. அதனால் அம்மக்கள் இப்னு தைமியாவுக்கு எந்தக் கெடுதலையும் செய்ய முடியவில்லை. இச்சம்பவம் மூலம் அன்று இப்னு தைமியாவின் கருத்துகளை விரும்பாமல் அவருக்கு பிரச்சனை உண்டாக்க விரும்பிய மக்கள் இருந்தனர் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
போர் வீரர்
அன்று அந்நாடும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் தார்தாரியர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். தார்தாரியர்கள் யார் என்று அறிவீர்கள் என்று நினைக்கிறேன். பாக்தாதைச் சூறையாடி அங்குள்ள முஸ்லிம்களின் வளங்களை அழித்த தார்தாரியர்கள் இப்போது அகண்ட சிரியா பகுதியை —அதாவது (தற்போதைய) சிரியா, லெபனான், பாலஸ்தீன் மற்றும் ஜோர்டான் பகுதிகளை— அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே தன் நாட்டுக்கு தீவிர ராணுவ அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த இப்னு தைமியா ராணுவத்தில் சேர்ந்து போர் செய்வதற்காக பதிவு செய்தார்.
ஆனால் அன்று அறிஞர்கள் பலர் இப்படிச் செய்பவர்களாக இருக்கவில்லை. நாம் ஏற்கனவே சொன்னது போல சில அறிஞர்கள் பாக்தாதில் பாதுகாப்பின்றி உணர்ந்த போது டமாஸ்கஸுக்குச் சென்றனர். இப்னு தைமியாவின் தந்தையும் அதில் ஒருவர். இன்னும் சிலர், அல் அந்தலூசில் ஏற்பட்ட ஸ்திரத்தன்மை கேடால் அசௌகரியமாக உணர்ந்த போது, அதனால் பாதுகாப்பின்றி உணர்ந்த போது வடக்கு ஆப்பிரிக்கா நோக்கி கெய்ரோவுக்கு சென்றனர். ஆனால் இப்னு தைமியா, ராணுவ அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த போது, ‘ஜிஹாது செய்வோம்; களத்தில் சென்று போர் செய்வோம்’ என்றார். இது அவருக்கிருந்த மதிப்பை மேலும் அதிகரித்தது. எனினும் மக்கள் மத்தியில் அங்கீகரிப்பட வேண்டும் என்ற நோக்கத்திலோ அவர்கள் மத்தியில் மதிப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்திலோ அவர் இப்படிச் செய்யவில்லை. தன் மனசாட்சிக்கு உட்பட்டு ‘இதுதான் சரியான செயல்; இந்த நேரத்தில் நான் இதைச் செய்யவில்லை எனில் வேறு யார்தான் செய்வார்’ என்று கருதியே போரிடச் சென்றார். இதனால் அவருடைய புகழ் மேலும் அதிகரித்தது.
அச்சமயத்தில் எகிப்துக்கும் சிரியாவுக்கும் இடையே ஒருவிதமான ஒத்துணர்வு நிலவியது. தார்தாரியர்களின் இருப்பால் சிரியா இறையாண்மை குலைந்து காணப்பட்டது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பொறுப்பு அன்றைய எகிப்தின் ஆட்சியாளரான நாசர் கலவூன் மீது விழுந்தது. தார்தார்களுக்கு எதிராகப் போரிடச் சென்ற இப்னு தைமியா நாசர் கலவூனின் தலைமையின் கீழ் அணி சேர்ந்தார். பிரபல அறிஞர் ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்து போர் புரியத் துணிந்தது பாராட்டுக்குரியதே. இதனால் அவ்வாட்சியாளரும் இப்னு தைமியா மீது நல்லெண்ணம் கொண்டார். அவருடைய இப்பண்பை அங்கீகரிக்கும் வண்ணம் அவருக்கு ஆசிரியர்கள் அல்லது பிரச்சாரகர்களை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கினார். ஆக நாசர் கலவூனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளான பாலஸ்தீனின் சில பகுதிகள், எகிப்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்களை நியமிக்கும் அதிகாரம் இப்னு தைமியாவுக்கு கிட்டியது. மேலும் மக்கள் நலன் சார்ந்து சில சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்கூட இப்னு தைமியா பெற்றார்.இதனால் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் இப்னு தைமியா போர் செய்ய முற்பட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டாம். அப்பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன; அவரும் அதை ஏற்றுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படியாக தனக்குக் கிடைத்த அதிகாரத்தை இப்னு தைமியா எப்படி பயன்படுத்தினார் என்பதை பின்வரும் சம்பவம் எடுத்துரைக்கிறது. இன்றைய சூஃபி ஷேக் போல ஒருவர் அன்று இருந்தார். ஹஷ்ஷாஷீன் என்றொரு குறிப்பிட்ட சூஃபி பிரிவைச் சார்ந்தவர் அவர். அப்பிரிவினர், போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். அது அவர்களுடைய வழிமுறையாக இருந்தது. அவர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய வரலாறு உள்ளது. எனினும் அன்றைய மைய அதிகாரத்தைப் பொருத்தவரை அவர்கள் எரிச்சலூட்டக் கூடியவர்களாகவும் முஸ்லிம் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை குலைக்கக்கூடியவர்களாகவும் கருதப்பட்டனர். அவர்களிலிருந்து ஒருவர் இப்னு தைமியா முன் கொண்டு வரப்பட்டார். அம்மனிதர் மிக நீண்ட தலைமுடி கொண்டவராகவும், மிக நீண்ட நகங்களைக் கொண்டவராகவும், அதேபோல நீளமான மீசை வைத்திருந்தவராகவும் இருந்தார். அவர் பல நாட்களாக முடி அல்லது நகங்களை வெட்டாதது போலத் தெரிந்தது. இதைப் பார்த்த இப்னு தைமியா, அவருடைய முடி மற்றும் நகங்களை வெட்டி தூய்மையான முஸ்லிம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தார். பின்னர் அவரை நோக்கி, நபித்தோழர்களைப் பற்றி பேசும் போதும் பொதுவாக முஸ்லிம்களைப் பற்றி பேசும் போதும் தகாத சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் சிந்தனையை ஊசலாடச் செய்யும் போதைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறினார். அன்று அவர்கள் என்னமாதிரியான போதைப் பொருட்களைப் பயன்படுத்தினர் என்று நான் அறியேன். எனினும் வேறொரு உலகத்தில் இருப்பது போல பிரமையில் ஆழ்த்தும் போதைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும். மேலும் அம்மனிதர் கனவுகளுக்கு விளக்கம் சொல்வதிலும் ஈடுபட்டிருந்தார். இப்னு தைமியா அவரிடம் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
இப்னு தைமியா, தான் பெற்ற அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினார் என்று இச்சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அவர் அம்மனிதரை கடினமாக நடத்தினார் என்றோ அவரை நாடுகடத்தினார் அல்லது தகாத முறையில் நடத்தினார் என்றோ வரலாறு சொல்லவில்லை. சாதாரண மனிதர் ஒருவர் எது சரி என்று நினைப்பாரோ அப்படித்தான் இப்னு தைமியா நடந்து கொண்டார்.
ஆனால் இச்சம்பவம் சூஃபி போக்கு கொண்டவர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறவில்லை. தாடி, முடி மற்றும் நகங்களை வளர்க்கும் உரிமை அம்மனிதருக்கு உண்டு அல்லவா! இச்சம்பவம் மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் இப்னு தைமியாவோடு கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தங்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதன் குறியீடாக இதை பார்த்தனர். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று அவ்வறிஞர்கள் கேட்டனர். இங்கு நாம் அறிஞர்களைப் பற்றியே பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்க. அவர்கள் சூஃபி அறிஞர்களாகவும் இருக்கலாம் அல்லது சூஃபி அல்லாத ஆனால் இப்னு தைமியாவோடு கருத்து வேறுபட்ட பிற அறிஞர்களாகவும் இருக்கலாம்.
வெறுப்பைச் சம்பாதித்தல்
அச்சமயத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் மத்தியில் செல்வாக்கு பெற்ற பிரபல சூஃபி ஒருவர் இருந்தார். அவரது பெயர் முஹையித்தீன் இப்னு அரபி. அல் அந்தலூசிலிருந்து வந்திருந்த அவர் சிந்தனைப் பள்ளியைப் பொருத்தவரை மாலிகியாக இருந்தார். அதே சமயம் ஒரு சூஃபியாகவும் இருந்தார். மார்க்க அபிப்பிராயங்கள் என்று வரும் போது இப்னு தைமியாவும் இப்னு அரபியும் கிட்டத்தட்ட எதிர் முனையில் நின்றனர். அவர்கள் இருவருக்கும் மத்தியில் தீவிர கருத்து வேறுபாடு இருந்தது. இப்னு அரபியின் பெயரைச் சொல்லி இப்னு தைமியா பேசியதாக நான் எந்தக் குறிப்பையும் பார்க்கவில்லை. ஆனால் அவருடைய கருத்துகளை எடுத்துரைத்து அவற்றை அம்பலப்படுத்த இப்னு தைமியா முயற்சித்தார்.அப்பகுதியில் வாழ்ந்த சூஃபி மக்களின் தலைவர் (இமாம்) போல இப்னு அரபி இருந்தார்.
இப்னு தைமியாவின் செயல்பாடுகளைப் பார்த்த மிதவாத’ சூஃபிகளும் சரி, நன்கு ஊறியிருந்த சூஃபிகளும் சரி அவரோடு பிரச்சனையைக் கிளப்பினர். இப்னு தைமியாவும் கனமான சொற்களை பிரயோகிப்பவராக இருந்தார். எனினும் அவை தகாத சொற்களாக இருக்கவில்லை. தன்னோடு கருத்து வேறுபட்டவர்களுக்கு —அவர்கள் அறிஞர்களாக இருந்தாலும், அவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்தாலும், அவரே ஒரு சமயத்தில் அவர்களுடைய மாணவராக இருந்திருந்தாலும் சரி— எதிராக மிகக் கூர்மையான சொற்களை இப்னு தைமியா பிரயோகித்தார்.
இதனால் இப்னு தைமியா ஏராளமானவர்களின் பகையை சம்பாதித்தார் என்று பார்க்க முடிகிறது. சிரியாவின் அறிஞர் சமூகம் அவருக்கு எதிராக புகார் செய்யக் கிளம்பியது. அவர்கள் தங்கள் புகாரை அதிகார மையமாக விளங்கிய எகிப்து அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றனர். “இவரை ஏதாவது செய்தாக வேண்டும். இவர் எல்லை மீறிவிட்டார். அஷ்அரிகளுக்கு எதிரானவராகவும் சூஃபிகளுக்கு எதிரானவராகவும் உள்ளார். கிட்டத்தட்ட எல்லா அறிஞர்களோடும் இவர் பிரச்சனை செய்கிறார்” என்பதாக அவர்கள் முறையிட்டனர். அன்று எகிப்து மற்றும் சிரியாவில் அஷ்அரி கோட்பாடு கிட்டத்தட்ட ஒரு புனிதக் கோட்பாடாக இருந்தது. ஆக இப்னு தைமியா பொதுக் கருத்துக்கு எதிராகப் பேசி வெறுப்பை சம்பாதிக்கத் துவங்கினார்.
உஸ்மானிய பேரரசர்கள் சுல்தான் என்று அழைக்கப்பட்டதைப் போல அன்று எகிப்திய ஆட்சியாளரும் சுல்தான் என்றே அழைக்கப்பட்டார். போரில் ஈடுபட்ட இப்னு தைமியா மீது பிரியம் கொண்டிருந்த சுல்தான் நாசர் கலவூன், அவருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. மக்கள் எல்லோரும் இப்னு தைமியாவுக்கு எதிராக இருந்த போதிலும் நாசர் கலவூன் அவர் மீது அனுதாபம் கொண்டார். ஆனால் அச்சமயம் நாசர் கலவூன் தன் பதவி மீது ஆவல் இழந்தவராக ஆட்சியைத் துறக்க முடிவெடுத்திருந்தார். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்த போதுதான் இப்னு தைமியாவுக்கு எதிரானவர்களின் அதிகாரம் மேலெழத் துவங்கியது. இத்தகைய ஆட்சி மாற்றம் நிகழவிருந்த சமயத்தில் இப்னு தைமியா மீது பரிவு கொண்டிருந்த சுல்தான், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டி அவரை எகிப்துக்கு அழைத்து விளக்கம் கேட்க முடிவெடுத்தார். ‘இவர்கள் தங்கள் கருத்தை கூறிவிட்டனர். அவருடைய கருத்தையும் கேட்பதுதான் நியாயம்’ என்று எண்ணி அவரை அழைக்க முடிவெடுத்தார். இருதரப்பு கருத்துகளையும் கேட்ட பின்னர் சரியானதை எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார்.
இப்னு தைமியாவுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. “நீங்கள் ஒரு அறிஞர்; சுயமாக சிந்திக்கக் கூடியவர்; வெளிப்படையாகப் பேசுபவர். இங்கு வந்து உங்கள் கருத்தை முன்வைக்க அழைப்பு விடுக்கிறோம். நீங்கள் வர இயலுமா? பிறகு எது சரியான கருத்தோ அது நிலைக்கட்டும்” என்பதாக அவ்வழைப்பு இருந்து. இது ஒரு கபடமற்ற அழைப்பாகவே தெரிந்தது. ஆனால் சிரியாவில் இருந்த இப்னு தைமியாவின் நண்பர்கள் அவரை செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர். இது எதிரிகளின் சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என்றனர். ஆனால் மன உறுதி மிக்க இப்னு தைமியா இவ்வழைப்பின் சாதக பாதகங்களை அலசிப் பார்த்தார். மனசாட்சியோடு சிந்தித்து எகிப்துக்குச் செல்ல முடிவெடுத்தார். பாதகங்கள் இருந்தாலும் அங்கு செல்வது பெறுமானம் மிக்கது என நினைத்தார்.
விசாரணை
இப்படியாக இப்னு தைமியா ஹி. 705-ல் எகிப்துக்கு வந்து சேர்ந்தார். வழியில் பள்ளிவாசல்கள் இருக்கும் பல்வேறு இடங்கள் மற்றும் நகரங்களில் தங்கி உரைகள் நிகழ்த்தி பாடங்கள் நடத்தினார். ஆனால் அவருடைய எதிரிகள் வேறு திட்டம் வைத்திருந்தனர். எகிப்துக்கு வந்து சேர்ந்த இப்னு தைமியா, அல் கல்அ என்ற அரங்கத்தில் அங்குள்ள அறிஞர் பெருமக்களை சந்தித்தார். இன்றைய நகராட்சி அரங்கம் போன்ற ஒரு அரங்கம் என்று அதை புரிந்து கொள்ளலாம்.அங்கு அறிஞர்கள், நீதிபதிகள், அரசாங்கத்தில் செல்வாக்குமிக்கவர்கள் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் குழுமியிருந்தனர். ‘இது சாதாரண விஷயம் அல்ல; ஏதோ பெரிதாகச் சம்பவம் நிகழப் போகிறது’ என்று எண்ணி காத்திருந்தனர். அங்கு இப்னு தைமியா பேச முற்பட்டார். ஆனால் அவருடைய எதிரிகள் அவரை பேச விடவில்லை. அப்போதுதான் இப்னு தைமியா தான் எதிர்பார்த்து வந்தது இதுவல்ல; அவருக்குச் சொல்லப்பட்டது இதுவல்ல என்பதை உணர்ந்தார்.
இப்னு தைமியாவின் பேச்சுத் திறமையை அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். நீட்டி முழக்கி பேசுபவராகவோ, பிரச்சனைகளிலிருந்து நழுவிச் செல்பவராகவோ, சரியான வார்த்தைகளின்றி தடுமாறுபவராகவோ அவர் இருக்கவில்லை. சொல்ல நினைப்பதில் முழுப் பிடிமானம் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக அவர் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை. மாறாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில்முதன்மை அறிஞராகவும் சட்டவியலாளராகவும் இருந்தவர் ஒரு மாலிகி நீதிபதி. அவருடைய பெயர் ஸைனுத்தீன் இப்னு மஃலூஃப். அவர் இப்னு தைமியாவை குறிப்பிட்டு “இவர் அல்லாஹ் அரியணையில் இருப்பதாகச் சொல்கிறார்” என்றார். அதாவது ‘இப்னு தைமியா அல்லாஹ்வுக்கு பௌதீகத் தன்மை கொடுத்துவிட்டார். இப்படி யாரும் நம்பிக்கை கொள்ளக் கூடாது. எனவே அவர் இஸ்லாத்தின் கூறுகளை மீறிவிட்டார்’ என்று குற்றம் சுமத்தினார். மேலும் அவர் “எழுத்துக்கள் மற்றும் ஒலி மூலம் அல்லாஹ் பேசுகிறான்’ என்று இப்னு தைமியா கூறுகிறார்” என்றார். இது ‘கல்லமல்லாஹு மூசா தக்லீமா’ (பேச்சு நடையில் அல்லாஹ் மூசாவோடு உரையாடினான்) என்ற குர்ஆன் வசனம் தோடர்பான சர்ச்சை ஆகும். இதன் பொருளை பல்வேறு அர்த்தங்களில் புரிந்து கொள்ள முஸ்லிம் உள்ளம் முயற்சி செய்யும். ஆனால் இந்த மாலிகி நீதிபதி இந்த அஷ்அரி விவகாரத்தை காரணம் காட்டி இப்னு தைமியாவை சிக்க வைக்க முயற்சித்தார். இங்கு அவர்கள் இப்னு தைமியாவை பேச அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க. ‘மனிதர்களைப் போல அல்லாஹ்வும் வாய்மொழியாக பேசுவதாக இப்னு தைமியா சொல்கிறார்’ என்று அவர் சார்பாக இவர்களே கூறினர். எனவே ‘அவர் அல்லாஹ்வுக்கு மனிதத் தன்மையை கற்பிக்கிறார்’ என்று சொல்லி அதற்காக அவரை குற்றம்பிடித்தனர்.
இதைக் கேட்ட உடன் இப்னு தைமியா —அவரை அவர்கள் பேச அனுமதிக்காத நிலையிலும்— உணர்ச்சி வேகத்துடன் “என்ன தைரியம் இருந்தால் என் எதிரியாக இருந்து கொண்டே என்னை நீர் மதிப்பிடுவீர்” என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட அந்த நீதிபதி நிதானம் இழந்து உணர்ச்சிவசமானார். இந்த தருணத்தில் இது ஒரு நீதிமன்றம், அங்கு நடப்பது நீதி விசாரணை என்றும் விவாதம் அல்ல என்றும் இப்னு தைமியா தெளிவாகப் புரிந்து கொண்டார். ஆனால் அவருக்கு அவர்கள் அழைப்பு விடுத்த போது, ‘இங்கு வந்து உங்கள் கருத்தை முன் வையுங்கள்; நாம் விவாதிப்போம்’ என்றுதான் கூறினர். இப்போது அவருடைய கருத்தை முன்வைக்க அவர்கள் அனுமதிக்கவே இல்லை. இந்த எகிப்து பயணத்தில் இப்னு தைமியாவோடு அவரது சகோதரர்கள் இருவர் உடன் சென்றனர். ஒருவரின் பெயர் ஷரஃப் அத் தீன்; மற்றொருவரின் பெயர் மஜீத் அத் தீன்.
அன்றைய எகிப்தில் பிரதான நான்கு சிந்தனைப் பள்ளிகளிலிருந்தும் தனித்தனியாக தலைமை நீதிபதிகள் —இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் போல— இருந்தனர். இப்படியாக மாலிகி சிந்தனைப் பள்ளியின் நீதிபதியாக இருந்தவர்தான் அந்த நீதிபதி. அவர் ஏற்கனவே ஒருவித சூஃபி போக்கு கொண்ட ஒருவர் விஷயத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியதற்காக நன்கு அறியப்பட்டவர். அம்மனிதர் குறித்து இந்த நீதிபதி “அவர் ஒரு சூஃபி, எனவே அவர் இஸ்லாத்தின் அடிப்படை நியமங்களை மீறிவிட்டார். மேலும் தெளிவான (முஹ்கமாத்) வேத வசனங்கள் குறித்து அவருடைய விளக்கங்கள் கேலிக்குரியவை அல்லது நகைப்புக்கு உரியவையாக இருக்கின்றன; பூடகமான (முதஷாபிஹாத்) வேத வசனங்கள் குறித்து அவருடைய விளக்கங்கள் முரணாக உள்ளன’ என்று கூறி ‘இதன் காரணமாக அவர் மரண தண்டனைக்கு உரியவர்’ என்று தீர்ப்பு வழங்கினார். அப்படியே அத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சூஃபி என்பதாலேயே ஒருவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிதான் இப்போது இப்னு தைமியாவின் மரண தண்டனையையும் நியாயப்படுத்துவதற்காக மாலிகி சட்டவிவகாரங்களில் அவரை சிக்க வைக்க முயற்சி செய்தார்.
இந்த நீதிபதி ஒரே சமயத்தில் இருவேறு பாத்திரங்களை வகிக்க விரும்பினார். பிரதிவாதியாக இருந்த இப்னு தைமியா விஷயத்தில் முடிவெடுக்கும் நீதிபதியாகவும் அதே சமயம் அவருக்கு எதிரான வழக்கறிஞராகவும் இருக்க விரும்பினார். இதை இப்னு தைமியா அவரிடமே சொன்னார். “இருவேறு பாத்திரங்களை நீங்கள் ஒருவரே வகிக்க முடியாது” என்றார். ஆனால் குறிப்பிட்ட அந்த அமைப்பில் அவரால் தனது நிலைப்பாட்டை முன்னிறுத்த முடியவில்லை. ஹி. 705-ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதிகாரிகளின் விருப்ப வட்டத்தில் இல்லாதவர்களுக்கு என்ன நடக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அடி, சித்திரவதை போன்ற வன்முறைகள் அவர் மீது ஏவப்பட்டன. அவர் மட்டுமல்ல, மேலும் சில ஹன்பலிகளும் அதே விளைவுகளை சந்தித்தனர்.
விடுதலை
நாம் ஏற்கனவே சொன்னது போல அங்கு ஹன்பலி சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஒரு நீதிபதியும் இருந்தார். ஆனால் மிகவும் பலவீனமான ஆளுமையாக இருந்த அவரால், தன் கோட்பாட்டைச் சார்ந்த ஒருவரைக் கூட பாதுகாக்க முடியவில்லை.அவரால் இப்னு தைமியாவையோ பிற ஹன்பலிகளையோ பாதுகாக்க முடியவில்லை. மிகவும் பலவீனமான மனிதராக அவர் இருந்தார். எனவே இப்னு தைமியா சிறையில் காலம் கழிக்க நேர்ந்தது. ஈகைத் திருநாளுக்கு முந்தைய இரவு வரை அவர் சிறையில் இருந்தார். அன்று இரவு எகிப்தின் ஆட்சியாளர், ஷாஃபியீ, ஹனஃபி மற்றும் மாலிகி தலைமை நீதிபதிகளை அழைத்து இப்னு தைமியா குறித்து ஆலோசித்தார். ‘இவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளோம்?’ என்பதாகக் கேட்டார். இப்னு தைமியா சிறையில் இருந்தது அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர்கள் அவருக்கு பின்வருமாறு கோரிக்கை வைத்தனர். “நாங்கள் உங்களை விடுதலை செய்ய விரும்புகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்களுடைய முந்தைய அபிப்பிராயங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். இதை மட்டும் செய்துவிட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறோம்”. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு. உண்மைகளின் அடிப்படையில் அவர்கள் அவரை அணுகவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவரைப் பொருத்தவரை அம்மூன்று நீதிபதிகளும் ‘அரசவை அறிஞர்கள்’தான்.
இச்சம்பவம் மக்கள் மத்தியில் சில விளைவுகளை ஏற்படுத்தியது. சிரியாவின் மக்கள் இப்னு தைமியா மீதும் எகிப்தில் அவருக்கு நிகழ்ந்தவை குறித்தும் மிகவும் அனுதாபத்துடன் இருந்தனர். இது எகிப்திய அதிகார வர்க்கத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சிரியாவை ஆக்கிரமிக்க தார்தாரியர்கள் செய்த முயற்சியால் எகிப்தின் ஆட்சியாளர்கள்தான் சிரியாவுக்கும் ஆட்சியாளர்களாக ஆயினர் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அப்போது சிரியாவுக்கு என்று ஒரு நிலையான அரசாங்கம் இருக்கவில்லை. இப்னு தைமியா மீது சிரிய மக்கள் கொண்டிருந்த அனுதாபம் எகிப்திய அதிகார வர்க்கத்தின் மீதும் அதைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைத்த அறிஞர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தைமியாவை விடுவிப்பதற்கான ஒரே வழி அவர் தன் கருத்துகள் சிலவற்றில் சமரசம் செய்துகொள்வதுதான் என்று அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனால் அவர் அப்படிச் செய்பவர் அல்ல.
எகிப்தில் இப்னு தைமியாவோடு விவாதம் புரிந்த மற்றொரு மாலிகி நீதிபதி இருந்தார். பின் வரும் மூன்று விஷயங்கள் குறித்து இந்த விவாதம் நடந்து: அரியணை (அல் அர்ஷ்), இறைவாக்கு (அல் கலாம்), கீழிறங்குதல் (அல் நுஸுல்). அரியணை என்பது நாம் ஏற்கனவே சொன்ன ‘இஸ்தவா அலல் அர்ஷ்’ என்பது பற்றியது. அதாவது ‘அரியணையில் அவன் அமைந்தான்’ என்று சொல்லும் போது அதன் அசல் அர்த்தம் என்ன? என்பது பற்றியது. இறை வாக்கு என்பது ‘கல்லமல்லாஹு மூசா தக்லீமா’ என்பதன் பொருள் என்ன? என்பது பற்றியது. மாதத்தின் குறிப்பிட்ட சில சமயங்களில் அல்லாஹ் கீழிறங்கி வருகிறான் என்று சில நபிமொழிகள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன? என்பதுவே மூன்றாவதான ‘அல் நுஸூல்’ குறித்த விவாதம்.
பொதுவான அர்த்தங்களை மீறாமல் இவற்றை குறிப்பாக புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கும், குறிப்பாக அல்லாமல் பொதுவான அர்த்தத்தில் இவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கும் மத்தியில் வழக்கமாகவே இருக்கும் வேறுபாடு இந்த விஷயங்களிலும் இருந்தது. இது காலங்காலமாக இருப்பதுதான். இப்னு தைமியா தான் கொண்ட கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று அவர்கள் அறிந்தே இருந்தனர். தன் வாழ்நாளில் ஒருபோதும் அவர் தன் கருத்திலிருந்து பின்வாங்கியதே இல்லை. அவர் தன் கருத்துகளில் மிக உறுதியாகவும் மிகுந்த நம்பிக்கையுடனும் இருந்தார். எனினும் அவருக்கும் இந்த மாலிகி நீதிபதிக்கும் இடையே நடந்த விவாதம் அவருடைய விடுதலைக்கு வழிவகுத்தது. காரணம், இந்த நீதிபதியோடு ஒப்பிடுகையில் இப்னு தைமியா பன்மடங்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். இப்னு தைமியாவின் விடுதலை எகிப்திய ஆளும் வர்க்கத்துக்கு ஓர் அவகாசத்தை அளித்தது. அவரை சிறையில் அடைத்ததால் சிரியாவில் ஏற்பட்ட மக்கள் சீற்றத்தை இவ்விடுதலை கட்டுப்படுத்தியது.
விடுதலை அடைந்ததும் அவர் மீண்டும் பள்ளிவாசலுக்குச் சென்று வகுப்புகள் நடத்துவது, உரைகள் நிகழ்த்துவது என தன் வழக்கமான பணிகளை செய்யத் துவங்கினார். இப்படிச் செய்யக் கூடாது என்று யாரும் அவரை தடுக்கவில்லை.இப்படியாக எகிப்தில் ஆறு மாத காலம் சுதந்திரமாகச் சிந்திப்பது, தன் வழக்கமான பணிகளைச் செய்வது என செயல்பட்ட இப்னு தைமியாவின் புகழ் பரவத் துவங்கியது. ஏற்கனவே சிரியாவில் நடந்தது போல இங்கும் அவருக்கென்று அபிமானிகளும் பின்பற்றாளர்களும் உருவாகத் தொடங்கினர்.
♣ ♣ ♣ ♣ ♣
இஸ்லாமிய வரலாறு – 15 / இப்னு தைமியா சிந்தனைப் பள்ளி (பாகம் 2)