இஸ்லாமிய வரலாறு – 15 / இப்னு தைமியா சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி (பாகம் 2)

Posted on

இஸ்லாமிய வரலாறு – 15 / இப்னு தைமியா சிந்தனைப் பள்ளி (பாகம் 1)

♣ ♣ ♣ ♣ ♣

அனைத்திறைக் கொள்கை

பின்னர், எகிப்தில் மற்றொரு பிரச்சனை உருவானது. அது ‘வஹ்தத் அல் வுஜூத்’ என்ற கோட்பாட்டை நம்பும் சில சூஃபிகள் தொடர்பானது. தமிழில் இதை ‘அனைத்திறைக் கொள்கை’ என்று சொல்லலாம். சில சூஃபிகள் இக்கோட்பாட்டை நம்புபவர்களாக இருந்தனர். என்னால் இயன்ற அளவு இதை விளக்கிச் சொல்ல முயல்கிறேன். அதாவது ‘அல்லாஹ் வேறாக இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அவன் ஒன்றாக இருக்கிறான். எனில் எப்படி அவன் வேறாக இருக்க முடியும்?’. இதுதான் அக்கோட்பாடு. அடிப்படையில் இது இப்னு அரபியின் கோட்பாடு ஆகும். இப்னு தைமியா இக்கோட்பாட்டில் பிரச்சனை இருப்பதைக் கண்டார். ஆக மற்றவர்கள் இவரிடம் பிரச்சனையைக் கண்டனர். இவர் மற்றவர்களிடம் பிரச்சனையைக் கண்டார்.

‘வஹ்தத் அல் வுஜூத்’ என்பதற்கு நான் சொன்ன விளக்கம் பொதுவானது. இக்கோட்பாட்டை நம்பும் ஒரு சூஃபி நடைமுறையில் என்ன பொருள் கொள்வார் என்று பார்ப்போம். அவர் தன் ஆன்மாவை நெறிப்படுத்தி, தன்னுணர்வை கட்டுப்படுத்தி —இதைச் செய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும்— அல்லாஹ்வோடு இரண்டறக் கலந்துவிடும் ஒரு ஆன்மீக நிலையை அடைவார். அப்படி ஒரு நிலையை அடைந்து விட்டால் அவர், இனிமேலும் வணக்கவழிபாடுகள் செய்வதற்கு கட்டுப்பட்டவராக இருக்க மாட்டார் (முகல்லஃப்). அதாவது அல்லாஹ்வின் ஒரு பகுதியாகிவிடுவது என்ற உயரிய நிலையை அடைந்துவிட்டால் அவர் தொழுகை, நோன்பு போன்ற கடமைகளிலிருந்து விடுபட்டவராக ஆகிவிடுவார்.

இதைப் பார்த்த இப்னு தைமியா —சாதாரணமாக இஸ்லாத்தை புரிந்து கொண்ட எவரும் கேள்வி எழுப்புவதைப் போல— “என்ன மாதிரியான கொள்கையை முன்வைக்கிறீர்கள்?” என்பதாக அவர்களோடு கருத்து ரீதியாக மோதினார். இப்படியாக வணக்கவழிபாடுகள் செய்வதை நிறுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், அவர்கள் சொற்பமாகவே இருந்தனர் என்று நினைக்கிறேன். அவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக யாரும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படிச் சிலர் இருந்தனர் என்பது உண்மை. எகிப்தில் வாழ்ந்த துரூசிகள் இதைத்தான் செய்தனர். அரசாங்கம் அவர்களை எதிர்க்கப் போகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அங்கிருந்து வெளியேறி லெபனானின் மலைப் பகுதிகளில் குடியேறினர். அன்று முதல் அவர்கள் அங்கேயே வாழ்கின்றனர். பொதுமக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அவர்கள் தங்கள் கொள்கைகளை ரகசியமாக தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்து வைத்துள்ளனர்.

இப்னு அரபியைப் பொருத்தவரை, அவர் அனைத்திறைக் கொள்கையை நம்பினாலும், இந்த சூஃபிகள் சொல்வது போல வணக்கவழிபாடுகளிலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அவர் ஒரு மாலிகியாக இருந்தார். பிற மாலிகிகளைப் போல அவரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார். எனவே இப்படியாக வழிமாறிய சில சூஃபிகளைப் பார்த்த இப்னு தைமியா அவர்களின் ஏறுமாறான போக்கை எதிர்த்தார். ஏற்கனவே சிரியாவில் அர் ரிஃபாயி என்றொரு சூஃபி வழிமுறையை எதிர்த்ததைப் போலவே இங்கு எகிப்திலும் இவர்களை எதிர்த்தார். ஆக இவ்விஷயத்தில் இப்னு தைமியா சீராக ஒரே கொள்கையை கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.

எகிப்தில் இப்னு அதா அஸ் சிக்கந்தரி என்று மற்றொரு சூஃபி இருந்தார். இவர் இப்னு அரபியின் பின்பற்றாளர். பிற சூஃபிகள் மத்தியில் இவருக்கென்று ஒரு அந்தஸ்த்து இருந்து. அல் ஹிகம் என்பது இவர் இயற்றிய நூல் ஆகும். இவர் அரசாங்கத்துக்கு ஒரு மனு அனுப்பினார். அதில் இப்னு தைமியாவை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று முறையிட்டார். எனவே இப்பிரச்சனையை தீர்க்கும் முயற்சியாக எகிப்தின் சுல்தான், அறிஞர்களும் மற்றவர்களும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார்.

தாருல் அத்ல், அதாவது நீதியின் வீடு என்ற இடத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது அவர்களின் நீதித் துறை அமைச்சகமாக இருந்திருக்கக் கூடும். வழக்கம் போல இப்னு தைமியா இதிலும் கலந்து கொள்ள சம்மதித்தார். அதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. ‘இத்தகைய கூட்டங்களிலெல்லாம் என்னால் கலந்து கொள்ள முடியாது’ என்று சொல்பவராக அவர் இருக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த பிறருக்குத்தான் இவரோடு பிரச்சனை இருந்தது. இவருக்கு அவர்களோடு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

அவர் அங்கு செல்லவிருந்த போது ‘மக்கள் அனைவரும், அதிகார வர்க்கம் முழுவதும் உங்களுக்கு எதிராக இருக்கின்றனர் (‘இன்னன் நாச கத் ஜமா உலத்’ என்ற குர்ஆன் வசனம்)’  சொல்லி சிலர் அவரை எச்சரித்தனர்.இதைக் கேட்ட இப்னு தைமியா ‘ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்’ என்ற மற்றொரு குர்ஆன் மூலம் அவர்களுக்கு பதிலளித்தார். அவர் எதற்கும் அஞ்சியவராக இல்லை; மிகவும் தன்னம்பிக்கையோடு இருந்தார். இப்படியாக அவர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்தனர், கலந்தாய்வு செய்தனர். இறுதியாக இப்னு தைமியாவுக்கு ஆதரவாக இந்த கலந்தாய்வு முடிந்தது.

மீண்டும் பதற்றம்

அதற்குப் பிறகு, இப்னு தைமியாவுக்கும் சூஃபிகளுக்கும் இடையே பதற்றமும் கருத்து வேறுபாடும் அதிகரித்தன. குறிப்பாக பின்வரும் சம்பவத்துக்குப் பிறகு. இப்னு தைமியா பின்வருமாறு கூறினார்: “இன்னஹு லா யுஸ்தகாசு இல்லா பில்லா ஃபலா யுஸ்தகாசு பி அஹதின் மின் இபாதா வலவ் கான நபி அர் ரஹ்ம முஹம்மத் (ஸல்)”. அதாவது இக்கட்டான, நம்பிக்கையிழந்த தருணங்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் உதவி கோரக் கூடாது. வாழ்வா சாவா என்ற நிலை வரும்போது உங்களுக்கு ஏதாவது தேவை ஏற்பட்டால், அல்லாஹ்வின் அடியார்கள் —அருள் கூர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உட்பட— யாரிடமும்  உதவி கோரக் கூடாது’.

இது சூஃபி சமூகம் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. “நீங்கள் எப்படி இப்படிச் சொல்லலாம்?!” என்பதாக அவர்கள் கொந்தளித்தெழுந்தனர். சூஃபிகளின் பொது உணர்வு மற்றும் இப்னு தைமியாவின் —அவருடைய மாணவர்கள் மற்றும் அவருடைய அபிமானிகள் உட்பட— நிலைப்பாடு, இவற்றுக்கு இடையே சிக்கிக் கொண்டு என்ன நடக்கிறது என்று அன்றைய அரசாங்கம் கவனித்துக் கொண்டிருந்தது. பொதுவெளியில் இது குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ஒரு பக்கம் இப்னு தைமியாவும் அவருடைய சில பின்பற்றாளர்கள்; மறுபக்கம் நன்கு வேரூன்றியிருந்த மத நிறுவனம். இவற்றைப் பார்த்த அன்றைய அரசாங்கம் இப்னு தைமியாவை எப்படியாவது மௌனமாக்க முயற்சிப்பதுதான் நல்லது எனக் கருதியது.

எனவே அவர்கள் இப்னு தைமியாவுக்கு மூன்று தெரிவுகளை வழங்கினர். அவரை அழைத்து இவ்வாறு கூறினர். “நீங்கள் அலெக்சான்ட்ரியா நகருக்குச் செல்லலாம்; அல்லது உங்கள் சொந்த நாடான டமாஸ்கஸுக்குச் செல்லலாம் அல்லது மூன்றாவது தெரிவாக உங்களை நாங்கள் சிறையில் அடைத்துவிடுவோம்” என்றனர். இப்னு தைமியா சிறையை தேர்ந்தெடுத்தார். அலெக்சான்ட்ரியா அல்லது டமாஸ்கஸுக்குச் செல்வது பிரச்சனையை தீர்க்க உதவாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஏனெனில் இங்கு அவர் சந்தித்த பிரச்சனைகளை —உடனே இல்லை என்றாலும் விரைவில்— அங்கேயும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தனக்கு பேச்சுரிமை உண்டு எனில் தன்னை பேச அனுமதிக்கட்டும், அதன் பிறகு மக்கள் முடிவு செய்யட்டும்; இல்லையெனில் தான் சிறையை தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். ‘அஸ்ஸிஜ்னு அஹப்பு இலைய்ய’ —சிறையை நான் விரும்புகிறேன் என்றார் அவர். இது யூசுஃபின் (அலை) வார்த்தைகள். இதுவும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

இப்னு தைமியாவைப் பொருத்தவரை சுதந்திரம் என்பது உடல் சுதந்திரம் அல்ல. கெய்ரோவிலிருந்து அலெக்சான்ட்ரியாவுக்கோ அல்லது டமாஸ்கஸுக்கோ செல்வதால் ஒருவர் சுதந்திரம் அடைந்து விடுவதில்லை. மாறாக அசல் சுதந்திரம் என்பது சிந்தனை ரீதியானது. ஒருவர் சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்கப்படாவிட்டால் அவர் சுதந்திரமானவர் என்று சொல்ல முடியாது. மாறாக அவர் சிறையில் இருந்தாலும், அவருடைய உடல் வேண்டுமானால் ஒரு அறையில் கட்டுப்படுத்தப்படலாம்; ஆனால் அவருடைய சிந்தனை கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆக அவருடைய கருத்துப்படி அசல் சுதந்திர மனிதன் என்பவன் உண்மையாகவே சிந்திக்கும் மனிதன் ஆவான். இப்னு தைமியாவை உரிமை கோருபவர்கள் அவரைப் போல சிந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஆனால் அவரோடு இருந்த அவருடைய மாணவர்கள் பலர் அவர் டமாஸ்கஸுக்குச் செல்வதுதான் நல்லது என்று அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து அவரும் அம்மாணவர்களின் அறிவுறுத்தலின் பக்கம் செவிசாய்க்கவே எண்ணினார். ‘சரி டமாஸ்கசுக்கே சென்று விடுவோம்’ என்று நினைத்த இப்னு தைமியா ஹி. 707 ஷவ்வால் 18 அன்று குதிரை ஏறி பயணம் புறப்படத் தயாரானார். ஆனால் இப்போது அரசாங்கம் அவரை தடுத்தது. “எங்கு செல்கிறீர்கள்? வாருங்கள்சிறைக்கு!” என்பதாக அவரை சிறையில் அடைத்துவிட்டனர். சிறையில் அடைத்த பிறகு அவரை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அவரை மீண்டும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல தீர்மானித்தனர். ஆனால் இம்முறை அவர் மீது அவர்களுக்கு அதிக அனுதாபம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அறத்தின்பால் நிற்கும் அவரை அவர்கள் புரிந்து கொண்டனர். ‘இவர் உண்மையானவர்தான்; பாசாங்கு செய்பவரோ சாதாரணமானவரோ அல்ல’ என்பதை உணர்ந்து கொண்டனர்.

அவர்களுள் ஒரு நீதிபதி அவர் மீது அனுதாபம் கொண்டு “நீங்கள் சிறைக்குத்தான் செல்ல விரும்பினால், குறைந்தபட்சம் உங்களுக்காக உயர் தர சிறையை நாங்கள் வழங்க முடியும்” என்றார். இன்றைய காலத்தில் உயர் வகுப்பு மக்கள் சாதாரண சிறைகளில் அல்லாமல் வசதியான சிறைகளில் அடைக்கப்படுவதைப் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். எனவே அவர் சாமானிய குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைக்கப்படாமல் நீதிபதிகளின் சிறை என்ற ஒன்றில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் பிற மக்களை சந்திப்பதற்கும் தேவைப்பட்டால் அவரை கவனித்துக் கொள்ள சிலரை வைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்து. பின்னர் குறுகிய காலம் கழித்து அவரை விடுவித்துவிடலாம் என்று எண்ணிய அதே நீதி அமைப்பு அவரை விடுதலை செய்தது.

அலெக்சான்ட்ரியாவில்

இதற்குப் பிறகு,மீண்டும் மக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்; அவர் சொல்வதைக் கேட்பதில் ஆர்வம் காட்டினர். இச்சமயம் அவருடைய நண்பரும் அரசருமான சுல்தான் நாசர் கலவூன் தன் பதவியைத் துறந்திருந்தார். அவருடைய இடத்துக்கு வந்தவரின் பெயர் முவஃப்ஃபர் பி பர்ஸ். அவருடைய ஆன்மீகத் தலைவராக இருந்தவர் சூஃபி நஸ்ர் அல் முன்பஜி. இப்னு அரபியின் பின்பற்றாளராக இருந்த நஸ்ர் அல் முன்பஜி ஒரு சூஃபியாக இருந்தார். இப்னு தைமியாவை சமாளிக்க சிறந்த வழி அவரை நாடுகடத்துவது என்று நினைத்த இவர்கள் அப்படியே செய்தனர். அசல் நாடுகடத்தல் போல இல்லை என்றாலும், கெய்ரோவில் அவருக்கு இருந்த பிரபலமான சூழ்நிலை, பின்பற்றாளர்கள் போன்றவற்றிலிருந்து அவரை விலக்க எண்ணி அவர்கள் அவரை அலெக்சான்ட்ரியாவுக்கு அனுப்பினர். அங்கு சென்று அவர் செல்வாக்கு பெறுவதற்கு சிலகாலம் பிடிக்கும். இதனால் அவரது நடவடிக்கைகளை கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று எண்ணினர். இப்படியாக ஹி. 709 சஃபர் மாதத்தில் அவரை அலெக்சான்ட்ரியாவுக்கு அனுப்பினர். அங்கு சென்ற அவர் அவருக்கான பள்ளிவாசல், பாடம், வகுப்பு, மாணவர்கள் என அனைத்தையும் மீண்டும் நிறுவினார். இப்படியாக சுமார் ஏழு மாத காலம் அவர் செயல்பட்டார்.

இச்சமயம் எகிப்தின் முந்தைய சுல்தான் நாசர் கலவூன் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இந்த ஏழு மாத காலத்தில்தான் இப்னு தைமியா தனக்கு பகைவராக ஆகப்போகிற மற்றொருவரை சந்தித்தார். அவருடைய பெயர் இப்னு சப்யீன். இவர் சூஃபியிசத்தை மெய்யியலோடு இணைத்தார். இது அன்று பொதுவான நடைமுறையாக இருக்கவில்லை. இக்கட்டத்தில், இப்னு தைமியா ஹி. 709 ஷவ்வால் மாதத்தில் கெய்ரோவுக்கு திரும்பினார். முன்னர் அவர் மீது குற்றம் சுமத்தி, கேலி செய்த அறிஞர்கள், சட்டவியலாளர்கள் (ஃபுகஹா) மற்றும் நீதிபதிகள் தங்கள் செயல்களுக்காக மன்னிப்புக் கோரி அவரிடம் வந்தனர். இவ்வாறு மன்னிப்புக் கோர வந்தவர்களிடம் இப்னு தைமியா திரும்பத் திரும்ப கூறிய பதில்: “மன் ஹாதானி ஃப ஹுவ ஹில்லும் மின் ஜிஹதி – என்னை துன்புறுத்தியது யாராக இருந்தாலும் என்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்து அவரை மன்னிக்கிறேன்”.

இப்னு தைமியாவிடம் மிகவும் பரிவுடன் இருந்த நாசர் கலவூன் கூட அவருடைய எதிரிகளை தண்டிப்பதற்கு இப்னு தைமியா அனுமதி அளிக்க வேண்டும் என்று அவரை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தார். இதை அவர் தந்திரமாகவோ, உபாயமாகவோ அன்றி உளப்பூர்வமாகவே செய்தார். ஆனால் இப்னு தைமியா, எத்தகைய பழிவாங்கல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று சுல்தானை தடுத்துவிட்டார் இப்னு தைமியா சொன்னதாவது, “பழிவாங்கும் நடவடிக்கையாக நீங்கள் இவர்களை அகற்றும் அளவுக்குச் சென்றால் (அதாவது கொன்றுவிட்டால்), இவர்களுக்குப் பின்னால் வருபவர்கள் இவர்களைப் போல இருக்கமாட்டார்கள்”. அதாவது ‘என்னை இவர்கள் வெறுத்தாலும் இவர்களுக்குப் பிறகு வருபவர்கள் இன்னும் மோசமாக இருப்பார்கள்’ என்பது இப்னு தைமியாவின் எண்ணமாக இருந்தது. இந்த சமயத்தில்தான் இப்னு தைமியா —தான் அனுபவித்த எல்லா இன்னல்களுக்குப் பிறகும்— முதன் முறையாக கெய்ரோவிலேயே குடியேறி விட விரும்பியதாகத் தெரிகிறது.

ஆனால் அவருடைய பகைவர்கள் —சூஃபிகள், பிற அறிஞர்கள் மற்றும் சட்டவியலாளர்கள்— அவருக்கு எதிராக பொதுக் கருத்தை உருவாக்க முயற்சித்தனர். எனவே ஹி. 711 ரஜப் 4-ம் தேதி, ஒரு கும்பல் அவரை தாக்கியது. அவர் மீது வசைபாடி அவரை அடித்துத் துன்புறுத்தியது. கெய்ரோவின் ஹுசைனியா பகுதியில் இது நடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், இப்னு தைமியாவுக்கு ஆதரவாக ஒன்று கூடினர். மேலும் அவரிடம் “உங்களைத் தாக்கியவர்களை நாங்கள் பழிவாங்க விரும்புகிறோம். சரி என்று மட்டும் சொல்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். ஆனால் இப்னு தைமியா அதை விரும்பவில்லை; அவர்கள் சொல்வதை ஏற்கவில்லை.

பிறகு இப்னு தைமியா ஹி. 712 ஷவ்வால் மாதத்தில் டமாஸ்கஸ் திரும்பினார். அப்போது தார்தாரியர்களுக்கு எதிராக போர் தொடுப்பதற்காக எகிப்தின் ஆட்சியாளர் நாசர் கலவூன் தீவிரமான ஒரு பெரும் படையை திரட்டினார். இப்போது 50 வயதைத் தாண்டியிருந்த இப்னு தைமியா, இம்முறையும் போர்ப் படையில்தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கு முன்னர் அவர் போரில் கலந்து கொண்டபோது அவர் தன் 30-களில் இருந்தார். எனினும் இம்முறை தார்தாரிய போர் படைகள் முஸ்லிம்களோடு போரிடாமல் பின்வாங்கினர்.

ஷியாக்களை எதிர்த்தாரா?

ஆக இப்னு தைமியா கோட்பாடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டியவராக தன் புலமைசார் வாழ்வை துவங்கினார் என்றும்,பின்னர் ஒரு முழு ஹன்பலியாக மாறினார் என்றும், தன் வாழ்வின் இறுதி காலத்தில் சட்டவியல் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்றும் சொல்லலாம். அதிலும் இஸ்லாத்தின் கிளைப் பிரச்சனைகளில் (ஃபுரூஅத் தீன்) கவனம் செலுத்தினார்; அடிப்படைப் பிரச்சனைகளில் (உசூலத் தீன்) அல்ல. மேலும் சில நேரங்களில் அவருடைய கருத்துகள் நான்கு பிரதான சிந்தனைப்பள்ளிகளுடன் ஒத்துப்போகும். வேறு சில பிரச்சனைகளில் முரண்படும்.

அஹ்லுல் பைத் இமாம்களின் அறிவுசார் படைப்புகளை அவர் கற்றார் என்றும் அறிகிறோம். ஆனால் ஷியாக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட சிலரையும் அவர்களுடைய அப்போதைய அரசியல் நிலைப்பாட்டையும் அவர் சிறிதும் விரும்பவேயில்லை. அன்று சில இஸ்மாயிலி ஷியாக்கள், ஆக்கிரப்பாளர்களுடன் —தார்தாரியர்கள் மற்றும் சிலுவைப் போராளிகளோடு தொடர்பு வைத்துக் கொண்டு— இணக்கமாக இருந்து கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தினர். இதன் காரணமாகத்தான் அவர் சில ஷியாக்களை விரும்பவில்லை என்பது என் புரிதல். ஆனால் இதைக் காரணம் காட்டி ‘ஷியா இமாம்கள் சொல்வதை படிக்கமாட்டேன்; அவர்களுடைய கருத்துகளை கருத்தில் கொள்ளமாட்டேன்’ என்று அவர் சொல்லவில்லை. இன்று பலர் இப்னு தைமியாவை போற்றிப் புகழ்ந்து அவரை பிரபலப்படுத்துகின்றனர். ஆனால் ஷியாக்கள் என்று வரும்போது “அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படிக்கக் கூட முற்படாதீர்கள்” என்கின்றனர். இப்னு தைமியாவை பின்பற்றுகிறார்கள் என்றால் அவரைப் போல ஷியாக்களின் நூல்களை அவர்களும் படிக்கட்டுமே. இதில் என்ன பிரச்சனை?

இத்தனைக்குப் பிறகும் அவர் தன்னை ஒரு ஹன்பலியாகவே கருதினார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் மீது தான் கொண்டிருந்த அபிமானத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். ஆனால் அவர் எந்த விதத்திலும் ஒரு ஹன்பலி வெறியராக இருக்கவில்லை.

சில முரண்பாடுகள்

பிரதான இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் இப்னு தைமியாவுக்கு எதிராக முன்வைக்கும் முக்கியமான விமர்சனம் ‘அல் ஹல்ஃப் அத் தலாக்’ தொடர்பானது. ஒருவர் “அல்லாஹ் மீது ஆணையாக நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்” என்று சொன்னால், அது ஹலஃப் அல்லது சத்தியம் என்பதால் அந்த விவாகரத்து செல்லுபடியாகிவிடும் என்று பிரதான சிந்தனைப் பள்ளிகள் சொல்கின்றன. ஆனால் இப்னு தைமியா “இல்லை, அது அப்படி அல்ல” என்று தக்க காரணங்களொடு எடுத்துக் கூறினார். இப்படிச் சொல்வதற்கு அவருக்கு தைரியம் அளித்த ஒரு விஷயம் என்னவென்றால் சில ஷியா அறிஞர்களும் இதே கருத்தை கொண்டிருந்தனர் என்பதுதான்.

மற்றொரு பிரச்சனையும் விவாகரத்து தொடர்பானதே. ஒருவர் “நான் விவாகரத்து செய்கிறேன், விவாகரத்து செய்கிறேன் விவாகரத்து செய்கிறேன்” என்று மூன்று முறை சொல்லிவிட்டால்அது இறுதியாகிவிடும் என்று நான்கு பிரதான சிந்தனைப் பள்ளிகளும் சொல்கின்றன. இந்நான்கு சிந்தனைப் பள்ளிகளும் அவர் வாழ்ந்த பகுதியில் பிரதானமாக இருந்ததால் அவற்றைக் குறிப்பிட்டே சொல்கிறேன். ஆனால் இப்னு தைமியா “இல்லை, அது அப்படி அல்ல” என்றார். மீண்டும் அவருடைய கருத்து ஷியா அறிஞர்களின் கருத்துகளோடு ஒத்துப் போகிறது. இக்கருத்து நபித் தோழர்களின் பின்பற்றாளர்களின் (தாபியீன்) கருத்தோடும் ஒத்துப் போகிறது. இஸ்லாமிய வரலாறை தோண்டிப் பார்ப்பதால் இத்தகைய செய்திகள் நமக்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. நாம் இதைச் சொல்வதால்,இப்னு தைமியாவின் பின்பற்றாளர்கள் அசௌகரியமாகவே உணர்வார்கள் என்று கருதுகிறேன்.

நான்கு சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்த பெரும்பாலான அறிஞர்களின் (எல்லா அறிஞர்கள் அல்ல, பெரும்பாலான அறிஞர்கள்) கருத்தோடு இப்னு தைமியா முரண்பட்ட மற்றொரு விஷயம் பின்வருமாறு: ஒரு கணவர் தன் மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது விவாகரத்து சொன்னால் அது செல்லுபடி ஆகும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்னு தைமியா, “அது செல்லாது” என்றார். இதுவும் அஹ்லுல் பைத் அறிஞர்களின் கருத்துக்கு  இணக்கமாக இருக்கிறது. மேலும், தன் கருத்துக்குச் சான்றாக இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறினார். அப்துல்லாஹ் இப்னு உமர் தன் மனைவியை மாதவிடாய் காலத்தில் விவாகரத்து செய்வதாகச் சொன்னார். இவ்விஷயம் இறைத்தூதரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. இறைத்தூதர் “இப்படிச் செய்யக் கூடாது. அவர் மாதவிடாயிலிருந்து விடுபட்ட பின் நீங்கள் விரும்பினால் விவாகரத்து சொல்லலாம்” என்றார்.

மைய நீரோட்ட சிந்தனைப் பள்ளிகளோடு அவர் சில தீவிரமான கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். எனவே சில அறிஞர்களும் அவருடைய நலம் விரும்பிகளும் ‘இனிமேல் நீங்கள் மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) எதையும் கொடுக்க வேண்டாம். நீங்கள் குட்டையைக் குழப்புகிறீர்கள். நீங்கள் மௌனமாக இருப்பதே எல்லோருக்கும் நலம் பயக்கும்’ என்று அறிவுறுத்தினர். ஆனால் அவர் மௌனமாக இருப்பவர் அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட அவரிடம் “உங்கள் கருத்துக்களை வெளியே சொல்லாதீர்கள். அதனால் நான்கு சிந்தனைப் பள்ளிகளிலும் குழப்பம் உண்டாகிறது. உங்களுக்குள்ளாகவே அதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினர். ஆனால் இப்னு தைமியா தன் மனசாட்சிக்கு விரோதமாக அவ்வாட்சியாளர்களை திருப்திப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

சமாதிகளை தரிசிக்காதீர்

இப்னு தைமியா டமாஸ்கஸில் இருந்த போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டது. இது போன்ற சட்டக் கருத்துக்களை அவர் தொடர்ந்து சொன்ன போது அறிஞர்களும், அதிகாரத்தில் இருந்தவர்களும் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் மறுத்ததால் அவரை சிறையில் அடைத்தனர். டமாஸ்கஸில் அவர் ஐந்து மாதங்கள் பதினெட்டு நாட்கள் —ஹி. 720 ரஜப் 22 முதல் ஹி. 721 முஹர்ரம் 10 வரை— சிறையில் இருந்தார். அதற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்தார்; எழுதினார்; தன் கருத்துக்களை வெளிப்படுத்தினார். தன் வாழ்வின் இறுதி காலத்தில் ஒரு மிகப் பெரிய சட்டவியல் பனுவலை இயற்றினார். அது மிகவும் வளமானது என்று கருதப்படுகிறது.

ஹி. 726-ல் அவருடைய எதிரிகள் மொத்தமாக அணிதிரண்டு பொதுமக்கள் கருத்தை அவருக்கு எதிராகத் திருப்புவதற்கு ஏதாவது ஒரு துருப்பு கிடைக்காதா என்று தேடினர். மேற்குடியினரையும் ஜனரஞ்சகவாதிகளையும் ஒரு சேர இப்னு தைமியாவுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்ய முயன்றனர். அப்படியான ஒரு விஷயம் அவர்களுக்குக் கிடைத்தது. 17 ஆண்டுகளுக்கு முன் அவர் வழங்கிய ஒரு மார்க்கத் தீர்ப்புதான் அது. “சான்றோர்களின் சமாதிகளை தரிசிக்கச் செல்லக் கூடாது; அது இறைத்தூதரின் (ஸல்) சமாதியாகவே இருந்தாலும் சரிதான்” என்பதாக அவர் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தார். மக்கள் சமாதிகளுக்குச் செல்லக் கூடாது என்பதில் அவர் கறாராக இருந்தார். இத்தீர்ப்பு மக்கள் மத்தியில் மீண்டும் எடுத்துச் சொல்லப்பட்ட போது —இறைத்தூதர் மீதுஅவர்களுக்கு இருந்த நேசத்தின் காரணமாக— எழுந்த எதிர்வினையை இப்னு தைமியாவால் சமாளித்து நிற்க முடியவில்லை. இதன் விளைவாக அவர் மீண்டும் ஹி. 726 ஷாபான் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறை அவர்கள் சிறையில் அவரை எழுதப் படிக்க அனுமதிக்கவில்லை. அவருடைய புத்தகங்கள், பேனாக்கள், மை என அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். எதுவுமே இன்றி அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 60 தொகுதிகள் கொண்ட 14 அடுக்கு நூல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஹி. 728 ஷவ்வால் 20 அன்று உடல் சுகவீனமுற்று அவர் மரணித்தார். என்னமாதிரியான சுகவீனம் என்று குறிப்பிடப்படவில்லை. அவருக்கு நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டி ஒரு அரசாங்க அதிகாரி அவரிடம் சென்றார்.

எகிப்தின் ஆட்சியாளராக இருந்த நாசர் கலவூன் இப்னு தைமியா மீது பரிவுடன் இருந்தார் என்று பார்த்தோம். ஆனால் பிற்காலங்களில் அவரும் இப்னு தைமியாவுக்கு எதிராகத் திரும்பினார். இதற்குக் காரணம் பின்வரும் சம்பவம் ஆகும். ஒரு முறை நாசர் கலவூன் வேட்டைக்குச் சென்ற போது —எந்த இடம் என்று குறிப்பிடப்படவில்லை— ஏதோ ஒரு வலியால் தீவிரமாக பாதிக்கப்பட்டார். தொடர்ந்து பயணிக்கக் கூட முடியாத அளவுக்கு வலி தீவிரமாக இருந்தது. குதிரையில் இருந்து அவர் கீழே இறங்கிவிட்டார். அப்போது அவர் வலியில் இருந்து விடுபட்டால் சூஃபிகளுக்காக ஒரு மடம் கட்டுவதாக நேர்ச்சை செய்தார். பின்னர் அவர் குணம் அடைந்ததும், அப்படியே ஒரு மடத்தையும் அதன் அருகே ஒரு பள்ளிவாசலையும் கட்டினார். அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையும் நடைபெற்றது. அத்தோடு வறியோருக்கு உணவு வழங்குவது போன்ற செயல்பாடுகளுக்காக ஒரு சமயல் கூடத்தையும் கட்டினார். இதனால் அவர் சூஃபிகளின் மிக நெருங்கிய நண்பரானார். இது அவரை இப்னு தைமியாவின் எதிரியாக மாற்றியது.

நேரம் கருதி இதோடு முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த வரலாற்றில் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவெனில் அன்றைய சூழ்நிலையும் அரசியல், சமூக, சமய சூழலும் ஆகும். இதைப் புரிந்து கொள்ளவில்லை எனில் அன்று நடந்த சம்பவங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

கேள்விபதில்

(உரையின் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இமாம் அல் ஆஸி பதிலளித்தார்)

கேள்வி: ஹி. 721 முஹர்ரம் 10 அன்று இப்னு தைமியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று குறிப்பிட்டீர்கள். இந்த தேதிக்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?

பதில்: அது குறித்து எந்தத் தகவலையும் நான் பார்க்கவில்லை. ஆகவே எனக்குத் தெரியாது. ஆனால் அன்றைய சூழலில் அவ்விடத்தில் எல்லா நாட்களையும் போல அதுவும் ஒரு சாதாரண நாளாகத்தான் இருந்தது. டமாஸ்கஸில் மக்கள் ஆஷுரா அனுஷ்டிப்பவர்களாக இருக்கவில்லை.

கேள்வி: இப்னு தைமியா தன் எழுத்துக்களில் ரவாஃபிகள் குறித்து எழுதிய போது பெரும்பாலும் இஸ்மாயிலி ஷியாக்களைக் குறித்துத்தான் எழுதினாரா?

பதில்: இது பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்னு தைமியாவின் அசல் எதிரிகள், எல்லா ஷியாக்களையும் குறித்து அவர் பேசினார் என்று அனைவரும் நம்ப வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் அவருடைய எழுத்துக்களில் ஷியாக்கள் என்பதைவிட அல் பாதினியா என்ற சொல்தான் அதிகமாக இடம் பெறுகிறது. அல் பாதினியா என்று அவர் சொல்லும் போது அது ஷியாக்களைக் குறிக்கிறது என்று பலர் புரிந்து கொள்கின்றனர். மேலும் பலர், இது சூஃபிகளைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். வேறு சிலர் இது மொத்த ஷியாக்களையும் மொத்த சூஃபிகளையும் குறிக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். அல் பாதினியா என்று சொல்லும் போது அவர் யாரை குறிப்பிட்டுச் சொன்னார் என்பதை அறிய உதவும் எழுத்துகளைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன். எனினும் எல்லா சூஃபிகளையும் எல்லா ஷியாக்களையும் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடும் அளவுக்கு அவர் கல்வியறிவு பெறாதவர் அல்ல என்று நான் நினைக்கிறேன்.

தார்தாரியர்களுக்கு எதிரான போரில் இப்னு தைமியா பங்கு பெற்றார். அதே போல ஹஷ்ஷாஷீன்களுக்கு எதிரான போரிலும் அவர் கலந்து கொண்டார். ஹஷ்ஷாஷீன்கள் ஷியாக்களிலிருந்து வந்தாலும், அவர்கள் தனித்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். எல்லா ஷியாக்களும் அப்படி இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அதே போல இப்னு தைமியா நுசைரீகளுக்கு எதிரான போரிலும் கலந்து கொண்டார். இந்த குறிப்பிட்ட வகை நுசைரிகள் இஸ்மாயீலி ஷியாக்களைப் போல, ஆக்கிரமிப்பாளர்களோடு இணக்கமாக இருந்தனர்.

எனவே விஷயம் இதுதான். இப்னு தைமியா ஷியாக்களுக்கு எதிரானவர் என்று விவாதத்துக்கே இடமின்றி சொல்பவர்கள் பின்வரும் காரணங்களுக்காகத்தான் அப்படிச் சொல்ல முடியும். அவர்கள் உண்மையிலேயே அறியாதவர்களாக இருப்பதால் —அவருடைய எழுத்துக்களை நடுநிலையோடு, விருப்பு-வெறுப்பின்றி படிக்காதவர்களாக— அப்படி சொல்லக் கூடும். அல்லது ஷியாக்களோடு ஒத்துப் போகாத சில அரசாங்கங்களிடமிருந்து பெறும் அரசியல் சமிக்ஞைகளால் அப்படிச் சொல்லக் கூடும். குறிப்பாக ஷியாக்களால் இப்போது இஸ்லாம் தூண்டி எழுப்பப்படும் போது, அதை விரும்பாத அவர்கள் ஷியாக்களுக்கு எதிராக எது கிடைத்தாலும் —இது போன்ற இப்னு தைமியாவின் எழுத்துக்களைக் கொண்டு மொத்த ஷியாக்களையும் அவர் குறிப்பிடுவதாகச் சொல்லி— அதை பயன்படுத்த நினைக்கின்றனர். அல்லது வெறுப்பு காரணமாக அவர்கள் அப்படி சொல்லக் கூடும்.

கேள்வி: இப்னு தைமியாவும் இப்னு அரபியும் ஒருவரையொருவர் எதிர்த்து விவாதம் புரிந்தனரா?

பதில்: இல்லை. இப்னு அரபி இப்னு தைமியாவுக்கு முன் வந்தவர். ஆனால் இப்னு அரபியின் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர். இப்னு அரபியின் மாணவரான எகிப்தில் இருந்த அஸ்-சிக்கந்தரியும் (சூஃபித்துவத்தையும் மெய்யியலையும் இணைத்துச் சொன்னவர்) இப்னு தைமியாவும் விவாதம் புரிந்திருந்தால் உயிரோட்டமான விவாதத்துக்கு அது சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்திருக்கும். ஆனால் அப்படி ஒன்று நடக்கவில்லை.

கேள்வி: “இமாம் புஹாரி மற்றும் இமாம் முஸ்லிம் சொல்வதை மறுக்கவே முடியாது. அவர்களுடைய கூற்றுகள் குர்ஆன் வசனத்தைப் போன்றவை. ஒரு வரிசைத்தொடர் கொண்ட ஹதீஸ்களானாலும் அவையும் ‘முதவாத்திர்’ ஹதீஸ்களைப் போலவே கருதப்படும்” என்ற கருத்தைச் சொன்ன முக்கியமான அறிஞர் இப்னு தைமியாதான். இதற்குக் காரணம் அவர் ஹன்பலி பின்னணி கொண்டவர் என்பதுதானா?

பதில்: ஆம்.

கே: ‘இஸ்லாத்தின் அறிஞர்’ (ஷெய்குல் இஸ்லாம்) என்ற பட்டம் இவருக்குத்தான் முதன் முதலில் வழங்கப்பட்டதா? யார் அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கியது?

ப: ஆம். ஷெய்குல் இஸ்லாம் என்று முதலில் அழைக்கப்பட்டவர் இவர்தான். மக்கள் அவருக்கு இந்த பட்டத்தை வழங்கினர். அவர் சில சமயம் அதிகாரத்தோடு இணக்கமாக இருந்தார். வேறு சில சமயம் மக்களோடு இணக்கமாக இருந்தார். இது அவருக்கு அத்தகைய ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது. நீங்கள் அவரோடு உடன்பட்டாலும் அவரை எதிர்த்தாலும், பகுதிதான் உடன்பட முடியும் அல்லது பகுதிதான் எதிர்க்க முடியும். அவர் தன் கருத்துகளில் உண்மையாக இருந்தார். அதனால்தான் அவரைப் பற்றி நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லையெனில் அவரைப் பற்றி பேசவே மாட்டோம்.

நாம் ஏற்கனவே நடத்திய வகுப்புகள், இன்றைய வகுப்பு, இனிமேலும் நடத்தப் போகும் வகுப்புகள் இவை அனைத்திலும் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்: இதுதான் முஸ்லிம்களின் வரலாறு. இப்னு தைமியாவை விருப்பு-வெறுப்பின்றி பார்க்க முடியாத ஒரு ஷியா வெறியரோ அல்லது இமாம் ஜாஃபர் அஸ் சாதிக்கை விருப்பு-வெறுப்பின்றி பார்க்க முடியாத ஒரு சன்னி வெறியரோ இருக்கும் வரை முஸ்லிம் சமூகம் (உம்மத்) செயல்பட முடியாது. இதுதான் நாம். இந்த உண்மையைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

800 வருடங்களுக்கு முன் இத்தகைய ஒருவர் வாழ்ந்தார் எனில், அதே போல ஒருவர் இன்றிலிருந்து 8 மணி நேரத்திலோ, 80 அல்லது 800 ஆண்டுகள் கழித்தோ மீண்டும் வரக்கூடும். அப்படி ஒருவர் வரும்போது இத்தகைய வெறிபிடித்தவர்கள் இருந்தால் நாம் எப்படி ஒன்றுபட்டு வாழ முடியும்? ஒன்றாக இணைய முடியும்? ஒன்றாகச் சிந்திக்க முடியும்? அல்லது இத்தகைய உண்மைப் பண்பை கொண்ட ஒருவர் வந்தால் அவரை இஸ்லாத்திலிருந்து விலக்கி வைக்கத்தான் நாம் சபிக்கப் பட்டிருக்கிறோமா?

இந்த வரலாறுகளை நாம் கற்க வேண்டும் என்றுதான் எதிர்கால முஸ்லிம் தலைமுறைகள் நம்மிடம் எதிர்பார்க்கின்றன. நம் வகுப்புகள் எதிலும் ‘இந்த கருத்தோடு உடன்படுங்கள்; இந்த கருத்தோடு உடன்படாதீர்கள்’ என்று நாம் சொன்னதே இல்லை. அது அவரவரைப் பொருத்தது. அம்மனிதர்கள் யாரும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கவில்லை. ஒருவர் கூட! திட நம்பிக்கையோடு உண்மையாகவே அவர்கள் பேசினர். அதற்காக அவர்கள் சொல்வது எல்லாமே சரி என்று நாம் சொல்லவில்லை. அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இஸ்லாத்தைப் புரிந்து அதன்படி செயல்படுவதற்காக தங்களால் இயன்ற அளவு இறுதிவரை முயற்சிக்கும் மனிதர்கள்தான் இவர்கள்.

அவர்களை நாம் படிக்கக் கூடாதா என்ன? அவர்களைப் பற்றி பேசினால் தீயதையே பேச வேண்டுமா? இந்தக் கண்ணோட்டம் எங்கிருந்து வந்தது? நாம் இதுவரை பார்த்த யாரும் தீயவர்கள் அல்ல. தங்கள் எழுத்துகளிலோ பேச்சுகளிலோ சூழ்ச்சி செய்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்களின் சேவகர்களாகவே உணர்ந்தனர். அவர்களுடைய எழுத்துகளிலும் பேச்சுகளிலும் கேடு இருக்கவில்லை. பிரச்சனை என்னவென்றால், முஸ்லிம் பொதுமக்களின் மனம், இத்தகைய மனிதர்களைப் பற்றி விருப்பு-வெறுப்பின்றி சொல்லப்படும் கருத்துகளை கேட்பதை பொறுத்துக் கொள்வதில்லை.

நாம் இங்கு பேசுவது போல பொதுமைப்படுத்தி முஸ்லிம் உலகில் எங்குமே பேச முடியாது. அதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஏன்? என்ன பிரச்சனை? இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என பல இங்கு உள்ளன. நாம் பேசுவது போன்ற கருத்துகள் பொதுக் கருத்தாக லட்சக் கணக்கில் முஸ்லிம்களைச் சென்றடைய அனுமதிக்கப்படாதது ஏன்? இத்தகைய தகவல்களைப் பார்த்துவிட்டு மக்கள் முடிவு செய்யட்டுமே! அதன் விளைவு எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமே, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! பிரச்சனை இதுதான். இத்தகைய கருத்துகளை,முஸ்லிம் பொதுப்புத்தி பொறுத்துக் கொள்ள மறுக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் பிரச்சனை. ஆக நாம் இதை பேசாவிட்டால், நாம் இதை வெளிக் கொண்டு வராவிட்டால், வேறு யார்தான் இதைச் செய்வார்?!

இது எல்லாமே நம் அங்கம்தான். நம் கைகளை வெட்டிக் கொண்டு, இமாம் ஸைதும் இப்னு தைமியாவும் இஸ்லாத்தின் அங்கம் அல்ல என்று சொல்லப் போகிறோமா? அவர்களும் கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட நம் உடலின் ஒரு அங்கம்தான். என்ன, மக்கள் அவர்களை நம்மை விட மிகச் சிறந்தவர்களாக் கருதுகிறார்கள். அவ்வளவுதான். எனினும் அவர்கள் நம்மில் ஒரு பகுதிதான்.

கேள்வி: அரேபியாவில் இப்னு தைமியா பிரபலமாக இருப்பது சவூதிகள் அவரை முன்னிலைப்படுத்துவதாலா? அல்லது மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் அவரை முன்னிலைப்படுத்தி சவூதிகள் அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றனரா?

பதில்: அரசாங்கங்கள் எப்படி இயங்குமோ அப்படித்தான் அவை இயங்கும்! அவை நிலைத்திருக்க விரும்பும். அவருடைய கருத்துகளை முன்னிலைப்படுத்துவதில்தான் அவர்களுடைய நிலைத்தன்மை உள்ளது எனில் அதை முன்னிலைப்படுத்துவர். அக்கருத்துகளில் குறைகாண்பதில்தான் அவர்களுடைய நிலைத்தன்மை இருக்குமெனில் அதில் குறை காண்பர். கடந்த 30 ஆண்டுகளாக இப்னு தைமியாவின் கருத்துகளை விளக்குவதிலும் புரிந்து கொள்வதிலும் அவர்களுடைய சொந்த வடிவத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனினும் ஹன்பலி பொதுமக்கள் மத்தியில் இப்னு தைமியா பிரபலமாகவே இருந்தார்.

“உங்கள் கல்வி திட்டத்தை சுத்திகரிக்க வேண்டும். இந்த அடிப்படைவாதிகள் சொன்னவற்றை உங்கள் பாடத்திட்டத்திலிருந்து அகற்றிவிடுங்கள்” என்ற அமெரிக்காவின் கட்டளையின் பேரில் சவூதி அரசாங்கம் இப்படிச் செய்கிறது. தங்கள் அரசாங்கம் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். அமெரிக்காவின் பக்கம் இருப்பதில்தான் தங்கள் இருப்பு உறுதியாகும் எனில் “நம் இருப்பை உறுதி செய்து கொள்வோம்” என்பதுதான் அவர்களின் போக்கு.

இங்கு எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. காஸான் என்றொரு மன்னர் இருந்தார். ஹுலாகு, செங்கிஸ் கான் ஆகியோர் வழிவந்தவர் இவர். அவர்கள் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். முஸ்லிம்களுடன் ஏதாவது ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது அவர் ஒரு அறிஞர், ஒரு மோதினார் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோரை அருகில் வைத்துக் கொள்வார். ‘இவர்கள் எல்லோரும் என் பக்கம் உள்ளனர். இப்போது என்ன சொல்கிறீர்?’ என்று கேட்பது போல! அவரிடம் சென்ற இப்னு தைமியா, “நீங்கள் போர் கைதிகளாகக் கைப்பற்றியுள்ள முஸ்லிம்களை விடுவிக்கக் கோருகிறேன்” என்றார். இதைக் கேட்ட காஸான், “உங்களைப் போல நானும் முஸ்லிம்தானே. ஏன் இப்படிச் சொல்கிறீர்?” என்றார். அதற்குப் பதிலளித்த இப்னு தைமியா, “ஆம்! ஆனால் நீங்கள் இஸ்லாமிய சட்டத்தை (ஷரீயத்) பின்பற்றவில்லை. இப்படி நீங்கள் வைத்திருப்பது போல முஸ்லிம் சிறைக்கதிகளை வைத்திருப்பதை ஷரீயத் சொல்லவில்லை” என்றார். மேலும் அம்மன்னரைப் பார்த்து “நீங்கள் உங்களை பெரியவர் என்று நினைத்துக் கொண்டீரா? நீரெல்லாம் ஒன்றுமே இல்லை” என்பது போலச் சொன்னார். ஒரு மன்னரைப் பார்த்து இப்படி அவரால் சொல்ல முடிந்தது. ‘ஷரீயத்’ என்ற சொல்லை இப்னு தைமியா அதிகம் பயன்படுத்தினார் என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“ஏன் இப்படிச் சொல்கிறீர்?” என்று மன்னர் கேட்க, “உங்கள் தந்தையும் பாட்டனாரும் முஸ்லிம்களாக மாறிய பின்னர் உண்மையாக இருந்தனர். ஆனால் நீர் உண்மையாக இல்லை. எனவே முஸ்லிம் கைதிகளை விடுவிப்பீர்” என்றார். அம்மன்னர் “நான் சிலரை விடுவிக்கிறேன்” என்று சிலரை விடுதலை செய்தார். கைது செய்தவர்களுள் கிறித்துவர்களும், யூதர்களும் இருந்தனர். இப்னு தைமியா அவர்களையும் விடுவிக்கக் கோரினார். அடிப்படைவாதம் என்று சொல்லி ஆர்பாட்டம் செய்யும் அமெரிக்கர்களுக்கும் சவூதிகளுக்கும் இதைச் சொல்கிறேன். “கிறித்தவர்கள் மற்றும் யூதர்கள் குறித்து நீர் ஏன் அக்கறை கொள்கிறீர்? அவர்கள் முஸ்லிம்கள் அல்லவே” என்று மன்னர் சொல்லவே அதற்கு இப்னு தைமியா “லஹும் மா லனா வ அலைஹிம் மா அலைனா —எங்களுக்கு எது உரியதோ அது அவர்களுக்கும் உரியது. எது எங்களுக்கு எதிரானதோ அது அவர்களுக்கும் எதிரானது” என்றார். அதாவது இஸ்லாமிய அரசாங்கத்தில் குடிமக்களின் உரிமையை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு சொன்னார்.

இச்செய்திகள் வெளியே வருவதில்லை. அவர்கள் விஷயங்களை தேர்ந்தெடுத்துச் சொல்கின்றனர். இப்னு தைமியாவை முன்னிறுத்த வேண்டுமெனில் அதைச் செய்வர். ஆனால் அவருடைய உண்மையான நோக்கத்தை விட்டுவிடுவர். ‘இன்றைய அரசியல் லாபங்களுக்காக மட்டும்தான் நான் செயல்படுவேன்’ என்கின்றனர்.இன்றைய சவூதி ஆட்சியாளர்கள் போல அல்ல அவர். சவூதிகளிடம் பெரும் செல்வ வளம் குவிந்து கிடப்பதால் அவருக்கு வேறொரு பிம்பத்தைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

1984-ம் ஆண்டில் நான் சலஃபி ஒருவரை சந்தித்தேன். அவரை அசல், தீவிர சலஃபி என்று சொல்லலாம். ஆனால் அவர் இமாம் கொமைனி மற்றும் ஈரான் இஸ்லாமிய புரட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். முழுக்க முழுக்க தன்னை சலஃபியாகக் கருதும் அவர், விஷயங்களை படித்துப் புரிந்து கொண்டார். எதைப் பற்றிய அக்கறையும் இல்லாத மேம்போக்கானவர்களைப் போலல்ல அவர். ஆனால் இத்தகையவர்கள்தான் எங்கும் வியாபித்து இருக்கின்றனர்.

இந்த வகுப்புக்கு வரும்பொழுது இப்னு தைமியா குறித்து நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தீர்கள்; இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று நான் அறியேன். ஆனால் யாரையும் ஒரு திசையில் இழுத்துச் செல்வது என் நோக்கம் அல்ல. நடந்த விஷயங்களை அப்படியே உங்கள் முன் எடுத்துச் சொல்லவே நான் இங்கு நிற்கிறேன்.

கேள்வி: மார்க்க சட்டத் தீர்ப்புகள்(ஃபத்வா), காலம் மற்றும் இடத்துக்கு கட்டுப்பட்டவையா? எடுத்துக்காட்டாக, இப்னு தைமியாவின் தீர்ப்புகள் இன்றும் நம்மை கட்டுப்படுத்துமா?

பதில்: எல்லா அபிப்பிராயங்களைப் போல மார்க்கத் தீர்ப்புகளும் காலத்துக்கு கட்டுப்பட்டவை. அனுமதிக்கப்பட்டது-தடுக்கப்பட்டது (ஹலால்-ஹராம்) என்பவைதான் காலத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் இவற்றில் சில விளக்கங்கள் தேவைப்படும். அதை விளக்கும் பொருட்டு சில தீர்ப்புகள் வழங்கப்படலாம். இவற்றில் வேத வசனம், நபிமொழி, முதல் தலைமுறைகளின் செயல்பாடு ஆகியவை இடம்பெறக் கூடும். இந்த விளக்கங்கள் காலத்துக்கு கட்டுப்பட்டவையே.

அன்று இப்னு தைமியா ஒரு கருத்தை முன்வைத்தார் எனில், அவர் குர்ஆனைப் படித்து, அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் சொன்னவற்றைக் கேட்டு சம காலச் சூழலில் அவற்றை புரிந்து கொண்டு அக் கருத்தை முன்வைத்தார். அக்காலச் சூழல் கடந்துவிட்டது. நாமும் அதே மூலங்களுக்குச் சென்று அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் சொல்வதைப் புரிந்து கொண்டு நம் காலச் சூழலுக்கு அதைப் பொருத்த வேண்டும். அப்படிச் செய்கையில் அது இப்னு தைமியா அல்லது வேறு அறிஞர்களின் கருத்தோடு உடன்பட்டால் அது வேறு விஷயம். அதற்காக நமக்கான சட்டங்களை அவர்களிடமிருந்து பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரோடு நம் உறவு முறிந்துவிடவில்லையே. இப்னு தைமியா அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் எனில் இன்றைய இப்னு தைமியா எங்கே? நம்மால் அத்தகைய கருத்துகளை உருவாக்க முடியாதவாறு மலடாகிவிட்டோமா என்ன? ஆம் எனில் நாம் மோசமான நிலையில்தான் இருக்கிறோம்.

♣ ♣ ♣ ♣ ♣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *