அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 2) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய அரசுக்குப் பதிலாக பரம்பரை ஆட்சிமுறையே அரசியல் கட்டமைப்பையும் சித்தாந்தத்தையும் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. அரசியல் மற்றும் அரச நிர்வாகம் தொடர்பான விவகாரங்கள் கண்டிப்பான முறையில் பொதுமக்களின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறியபோது, அவர்கள் சமயச் சடங்குகளை மாத்திரம் நிறைவேற்றுபவர்களாகச் சுருக்கப்பட்டார்கள். எழுச்சியூட்டும் விடுதலை உணர்ச்சியோ உணர்வோ அற்ற சடங்குகள் மீதான அதீத வலியுறுத்தல்தான் நியமம் என்றாகி இன்று வரை அவ்வாறே தொடர்ந்து வருகிறது. அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதனைத் தக்கவைப்பதற்குமான இஸ்லாமிய விதிமுறைகள் ஒருபோதும் காலூன்ற அனுமதிக்கப்படவில்லை. கோத்திரவாதத்தின் தீமைகள், பரஸ்பரப் பொறாமை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கை, அடக்குமுறை, சர்வாதிகாரம் ஆகியவை சன்னி அரசியல் கோட்பாடு, கட்டமைப்பு, நடைமுறை ஆகியவற்றில் உள்ளடங்கியவையாக மாறின. இதன் விளைவாக, உமைய்யா மற்றும் அப்பாஸி அரசகுலங்களின் அடிப்படையில் அமைந்த சன்னி அரசியல் அமைப்பு எக்காலத்திலும் சட்டப்பூர்வமானதாக மாற முடியவில்லை. ஆனால் தாம் கடைப்பிடித்த வழிமுறையில் அவர்கள், முக்கிய துறைகளில் இஸ்லாத்தின் உண்மைச் சமத்துவப் போதனைகளை நிரந்தரமாக இருட்டடிப்புச் செய்துவிட்டனர்.
இஸ்லாத்தில் அரசியல் என்பதன் வரைவிலக்கணம் என்னவென்றால், குர்ஆனும் நபிவழியும் அறிவுறுத்தியுள்ள சட்டப்பூர்வமான முறையினால் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும் (அதாவது ஒருவர் தன்னைத் தானே முன்மொழிவது அல்லது அத்துமீறித் திணித்துக்கொள்வது, வன்முறை அல்லது வஞ்சனையைக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது என்றில்லாமல், இறை பிரக்ஞையின் (தக்வா) அடிப்படையில் வெகுமக்கள் ஒருவரைப் பொறுப்புக்குத் தெரிவு செய்வதாகும்). அதிகாரம் செலுத்துதல் என்பது மனிதகுலத்துக்குச் சேவை செய்யும் பொருட்டு ஒரு கூட்டு முடிவெடுக்கும் சட்டகத்தின் ஊடாகச் சமூகநீதியை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாகும். எனவே, சட்டவிரோதமான அல்லது முறைகேடான வழியில் அதிகாரத்தைப் பெறுவதும், வரைமுறையின்றி பொருளாதார வளங்களைச் செலவிடுவதும் கண்டிப்பான முறையில் தடுக்கப்பட்டதாகும். சுருங்கக் கூறுவதாயின், இஸ்லாம் என்பது சடங்குகளாகச் சுருக்கப்பட்டு, தனிமனித அளவில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றாக ஆக்கப்பட்டது. இந்த ஆரோக்கியமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் இஸ்லாத்தின் திசைநெறியை நிரந்தமாக மாற்றியதுடன், அதன் அனைத்தளாவிய சமத்துவ உணர்வும் ஊதி அணைக்கப்பட்டது.
இந்தச் சட்டவிரோதத் தன்மையால் வெகுமக்களின் நலன்கள், விதிமுறைகள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் ஆகியவை அதிகார வெறிபிடித்த மேட்டுக்குடிகளிடமிருந்து வேறுபட்டு நின்றன. உதாரணமாக, எந்தவொரு சன்னி சமூகத்திலும் பொதுமக்களுக்கான இராணுவப் பயிற்சி அடிப்படை அங்கமாக ஆக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இம்மேட்டுக்குடிகளின் சட்டவிரோதத்தன்மை அவர்களை வெகுமக்களின் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது என்பதே ஆகும். இப்படியாக சட்டவிரோதத் தன்மை, கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் ஆகியவை சன்னி அரசியல் கட்டமைப்பு மற்றும் சிந்தனையின் அடையாள முத்திரைகளாக மாறின. இதன் விளைவாக இஸ்லாத்தின் பெயரால் ஒரு புதிய ஏகாதிபத்திய மதம் பரப்பப்படுவது நடைமுறை ஆகியது.
வன்முறையாலும் வற்புறுத்தலாலும் நிலைநிறுத்தப்பட்ட இவ்வகை மதத்தில் இஸ்லாம் என்பது, உணர்வேதுமற்ற வழிபாட்டுக் கிரியைகள் முதன்மை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக வேண்டுமென்றே சுருக்கப்பட்டது. அதேவேளை, ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புமுறையுடன் அவற்றுக்கிருந்த ஒட்டுறவும் முற்றாகத் துண்டிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நாட்களிலேயே சட்டத்தின் ஆட்சி, சமூகநீதி போன்ற மதிப்பீடுகள் கைவிடப்பட்டன. ஒடுக்குமுறைச் சகதியில் சிக்குண்ட இந்த வகை இஸ்லாத்தைத்தான் முஸ்லிம்கள் இன்றுவரை எவ்வித சிந்தனையோ மீளாய்வோ இன்றி பின்பற்றி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் அவர்கள், யார் நண்பர் யார் எதிரி என்பதையும், யார் சமூகத்தின் நியாயப்பூர்வ பக்திமிகு சட்டப்பூர்வ தலைவர், யார் அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதி என்பதையும் பிரித்தறிய இயலாதவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் இதே காரணத்தால்தான் அவர்கள் வெகுமக்களின் நலனுக்காக, சட்டப்பூர்வமான முறையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அமலாக்குவது எவ்வாறு என்பதை அறியாதவர்களாகவும் இருக்கின்றனர்.
இமாம்கள் (தலைவர்கள்), அறிஞர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த முஸ்லிம் வெகுமக்கள் என அனைவரும் ஒடுக்கப்பட்டபோது புலமைத்துவத் தேடலுக்கான கதவும், துளிர்விட்டிருந்த இஸ்லாமியச் சமூகத்தை வழிநடத்தும் பக்திமிகு சட்டபூர்வ தலைவர்களின் உரிமையும், இஜ்திஹாதின் (நியமங்களின் அடிப்படையிலான சுய முடிவு) கதவும் படிப்படியாக மூடப்பட்டன. எனவே முஸ்லிம்களின் படைப்பாக்கத் திறன் முழுவதும் கலை, கட்டிடக் கலை, போர்த்திற நுட்பங்கள் மற்றும் கருவிகளின் மேம்பாடு, அறிவியல் கற்கை மற்றும் ஆய்வு முறைமைகளின் பெருக்கம், கிரேக்க ரோம பகுத்தறிவுவாத கருத்தாக்கங்களைக் கற்றல் போன்ற அரசியல் அல்லாத, இறையியல் அல்லாத துறைகளின் பக்கம் மடைமாற்றி விடப்பட்டது. இத்தகைய புலமைத்துவ முன்னேற்றங்கள் இஸ்லாத்தின் காரணமாகவே சாத்தியமாயின. மாறாக சன்னி அரசியல் கட்டமைப்பு மற்றும் அமைப்புமுறையினாலோ அல்லது பரம்பரை சர்வாதிகாரத்தால் ஆன சன்னி அரசாங்கங்களின் வழிகாட்டல், ஊக்கம் அல்லது நிதியுதவியாலோ அல்ல என்பதை இங்கு உறுதியாக மனதில் இருத்தவேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள கருத்துகளுக்குச் சான்றாக துவக்ககால முஸ்லிம் வரலாற்றின் நம்பிக்கைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தாக வேண்டுமென்ற அவசியம் இல்லை. மாறாக, முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் பதிவுசெய்துள்ள முஸ்லிம் நாகரிகத்தின் வீழ்ச்சியும் சிதைவும் பற்றிய செய்திகள் கூட தம்மளவில் இந்தச் சட்டவிரோதத் தன்மை மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிரானவொரு அனுபவப்பூர்வ சான்றாக விளங்குகிறன. இவ்வரலாற்று உண்மைகளை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் சரி, அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரியே; முஸ்லிம் உலகைப் பொறுத்தவரை அவற்றின் தாக்கம் படுநாசகரமானது. மேற்கத்தியக் காலனித்துவத்துக்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்த பிரிவினைகள், உட்சண்டை, வீழ்ச்சி, சிதைவு, பிளவு ஆகியன அன்னியர் ஆக்கிரமிப்புக்கு வழிகோலின என்பதை எவரும் மறுக்க முடியாது.
‘வீழ்ச்சியடைந்து சிதைந்து நிற்கும் முஸ்லிம் நாகரிகத்தை சன்னி அரசியல் சிந்தனை உருத்திரிந்து செயலிழந்திருப்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்’ என, மேன்மைக்குரிய இஸ்லாமிய அரசியல் அறிஞரான டாக்டர் கலீம் சித்தீகிதான், எனது முனைவர் பட்ட ஆய்வின்போது எனக்கு வழிகாட்டினார்.
சமூகத்தை வழிநடத்தும் திறன் படைத்த, இஸ்லாத்தின் ஆழ்ந்த அறிவுமிக்க பெரும்பாலான இறை பிரக்ஞைமிகு தலைவர்களும் அறிஞர்களும் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர். எஞ்சியோர் விலைக்கு வாங்கப்பட்டனர் அல்லது சர்வாதிகார நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுக்குக் கொழுத்த ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டன. சட்டவிரோத ஆட்சியாளர்களை எதிர்க்கத் துணிந்த வெகு சிலரோ, பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் பொருட்டு விஷமூட்டப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். வேறு சிலர் நாட்டுப்புறங்களுக்கோ தொலைதூரப் பிரதேசங்களுக்கோ சென்று அமைதியான முறையில் இஸ்லாமிய ஞானத்தைப் பரப்பவும் பிரச்சாரம் செய்யவும் தலைப்பட்டனர். அவர்கள் பற்றியெரிந்து கொண்டிருந்த அரசியல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு சூஃபியிசத்தை வலியுறுத்தலாயினர். மத்திய ஆசியாவிலும் இந்திய-பாகிஸ்தான் துணைக்கண்டத்திலும் இந்த அறிஞர்கள் மற்றும் சூஃபிகள் மூலமாகவே இஸ்லாம் பரவியது; மதச்சார்பற்ற மன்னர்கள் மற்றும் படைத் தலைவர்களால் அல்ல. பல பிரபலமான, அதிகாரம் படைத்த மன்னர்கள் மற்றும் படைத்தலைவர்களின் அடக்கத்தலங்களில் தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருக்க அவை அனாதரவாக வறண்டு கிடக்கும் அதேவேளை, அறிஞர்கள் மற்றும் சூஃபிகளின் அடக்கத்தலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் அலைமோதுவதை இதற்கு வலுவானதொரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
எனினும், பொதுவாகப் பார்த்தால், இந்த அறிஞர்களும் சூஃபிகளும் அரசியலைக் கைவிட்டதன் மூலம் மறைமுகமாக இருபிரிவாக்கத்தை ஏற்றுக்கொண்டனர்: மன்னர்களையும் படைத்தலைவர்களையும் ஆட்சி செய்ய அனுமதித்துவிட்டு, இவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் துன்புற்றிருந்த வெகுமக்களுக்கு ஆன்மிகத்தின் ஊடாக நிவாரணமளிப்பதிலும் தமது கவனத்தைக் குவிக்கலாயினர். அரசியல் நீக்கமடைந்த இந்த அறிஞர்களும் சூஃபிகளும் தம்மளவில் மனிதகுலத்துக்கு மகத்தான சேவை புரிந்தபோதும், அவர்களால் அரசின் ஒருங்கிணைந்த அதிகாரம், திட்டங்கள் மற்றும் வளங்களுக்கு எவ்விதத்திலும் இணையாக இருக்க முடியவில்லை. இறை பிரக்ஞைமிகு தலைவர்கள் இருந்த போதிலும் அவர்களால் அரசின் தலைவர்களாகச் செயல்பட முடியவில்லை. காலவோட்டத்தில், அடக்குமுறை மற்றும் இருபிரிவாக்கத்தின் காரணமாக இறை பிரக்ஞைமிகு தலைவர்களின் தரமும் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இவ்வாறாக இஸ்லாமியச் சமூகம் வலுவிழந்திருந்தது. இந்த நிலையில் மேம்பட்ட அறிவியல் அறிவு, சிறந்த அமைப்புரீதியான ஒருங்கிணைப்புத் திறன், சாகச ஆர்வம், பேராசை, ஆதிக்க புத்தி ஆகியவற்றால் நிரம்பிய ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு ஒரு வினைத்திறன்மிக்க நடைமுறை ரீதியான இஸ்லாமிய எதிர்ப்பை அவர்களால் ஆற்ற முடியவில்லை.
♦ ♦ ♦ ♦ ♦